சென்னை: ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் இருந்து 6 மாதங்களில் 40 பைலட்டுகள் ராஜினாமா செய்திருப்பதால் அந்நிறுவனத்தின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுந்துள்ளதாக வர்த்தக வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
குறைந்த கட்டணத்தில் விமான சேவை அளித்து வருகிறது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம். இது கலாநிதி மாறனின் சன் குழுமத்துக்குச் சொந்தமானது.

இந்நிறுவனம் தொடர்ந்து ஐந்தாவது காலாண்டாக நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது. ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலாண்டில் இந்நிறுவனம் எதிர்கொண்ட நஷ்டம் ரூ. 310 கோடியாகும்.
இருப்பினும் கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனத்தின் நஷ்டம் ரூ. 559 கோடியாக இருந்தது. இந்த நிலையில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் இருந்து கடந்த 6 மாதங்களில் 40 பைலட்டுகள் தங்களது பதவியை ராஜினாமா செய்து வெளியேறியுள்ளனர். இவர்களில் கமாண்டர்கள் நிலையிலான உயர் பதவி வகிப்பவர்களும் அடங்குவர்.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக வெளியேறிய பைலட்டுகள் மத்தியில் கருத்து தோன்றியிருக்கலாம் என்று ஸ்பைஸ்ஜெட் நிறுவன தணிக்கையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் தொடர்ந்து உரிய நேரத்தில் இயக்கப்படாதது பல சமயங்களில் ரத்து செய்யப்பட்டதும் பைலட்டுகள் ராஜினாமாவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
கிங்ஃபிஷர் நிறுவனம் மூடப்பட்டதால் பதவியிழந்த பைலட்டுகள் போன்ற நிலை தங்களுக்கு வந்துவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையில் பலர் வெளியேறியிருக்கலாம் என்ற கருத்தும் எழுந்துள்ளது.
இதனிடையே இந்நிறுவனத்தின் நிதிநிலையை தணிக்கை செய்யும் எஸ்ஆர் பாட்லிபாய் அண்ட் அசோசியேட்ஸ் நிறுவனம் தனது அறிக்கையில், நிறுவனத்துக்கு உள்ள சொத்து மதிப்பைக் காட்டிலும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் திருப்பி அளிக்கவேண்டிய கடன் தொகை அதிகமாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications