மும்பை: மத்திய பட்ஜெட் வெளியீடு காரணமாக சனிக்கிழமை சிறப்பு வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் பல திடீர் மாற்றங்களை சந்தித்தாலும் சந்தை முடிவில் சென்செக்ஸ் 141 புள்ளிகள் உயர்வுடன் முடிவடைந்தது.
சிறப்பான பட்ஜெட் திட்டத்தால் மும்பை பங்குச்சந்தை மற்றும் நிஃப்டி சந்தைகள் திங்கட்கிழமை காலை வர்த்தக துவக்கம் முதலே உயர்வுடன் துவங்கியது. மேலும் நிஃப்டி குறியீடு புதிய உச்சத்தை எட்டும் நிலையில் உள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை 97.65 புள்ளிகள் உயர்வுடன் 29,459.14 புள்ளிகளை எட்டி முடிவடைந்தது, நிஃப்டியில் 54.90 புள்ளிகள் உயர்ந்து 8,956.75 புள்ளிகளை எட்டியது.
சென்செக்ஸ் குறியீடு
திங்கட்கிழமை காலை வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையின், சென்செக்ஸ் குறியீடு சுமார் 187.36 புள்ளிகள் உயர்வுடன் 29,548.86 புள்ளிகளை அடைந்துள்ளது. சென்செக்ஸ் இதுவரை 29,681.77 புள்ளிகள் என்ற உயரிய அளவை கடந்த ஜனவரி 29ஆம் தேதி எட்டியுள்ளது.
நிஃப்டி
மும்பை பங்குச் சந்தையை போலவே நிஃப்டியும் 56.95 புள்ளிகள் உயர்வுடன் 8958.80 புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதுவரை நிஃப்டி 8,952.45 என்ற உச்சத்தை எட்டி இருந்தது. குறிப்பிடதக்கது.
சிங்கப்பூர்
மத்திய பட்ஜெட் எதிரொலியாக இன்று காலை வர்த்தகத்தில் சிங்கப்பூர் பங்குச்சந்தையில் 8.40 மணியளவில் Nifty futures 1.2 சதவீத உயர்வை எட்டி இருந்தது குறிப்பிடதக்கது.
முக்கிய துறைகள்
மும்பை பங்குச் சந்தையின் இன்றைய வர்த்தகத்தில் வங்கி, ஆட்டோமொபைல், ஐடி, கேப்பிடல் கூட்ஸ், மெட்டல் மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயும் துறையின் பங்குகள் அதிகளவில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
நுகர்வோர் பொருட்கள் நிறுவனங்கள்
அதேபோல் எஃப்எம்ஜிசி மற்றும் நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகள் அதிகளவில் சரிவை தழுவியுள்ளது.
கட்டுமான துறை நிறுவனங்கள்
மேலும் நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இந்திய கட்டுமானத்துறையில் சுமார் 70,000 கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீட்டு திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் கட்டுமான துறை நிறுவன பங்குகள் அதிகளவில் வர்த்தகம் செய்யப்படுகிறது.