மும்பை: மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை வர்த்தகம் துவக்கத்திலேயே 100 புள்ளிகள் உயர்வுடன் சென்செக்ஸ் துவங்கியது, கடந்த 3 நாள் வர்த்தகத்தில் அதிகப்படியான சரிவை கண்ட சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் இன்று மத்திய அரசு வெளியிட உள்ள பிப்ரவரி மாதத்தின் நுகர்வோர் விலை பணவீக்கம் மற்றும் தொழில்துறை உற்பத்தி அளவு அறிக்கையை எதிர்பார்த்து சில்லறை முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர்.
இதன் காரணமாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சந்தைகள் உயர்வுடன் காணப்படுகிறது.
சென்செக்ஸ்
இன்று வர்த்தகம் துவங்கிய முதல், உயர்வுடனே காணப்படும் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 11.45 மணியளவில் 207 புள்ளிகள் உயர்வுடன் 28,858.02 புள்ளிகளை அடைந்துள்ளது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும் இன்று உயர்வுடன் காணப்படுகிறது. இதன் படி நிஃப்டி குறியீடு 65.10 புள்ளிகள் அதாவது 0.75 சதவீத உயர்வுடன் 8,765.05 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.
லாபமடைந்த நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் பெரும்பாலான உற்பத்தி நிறுவனங்கள் லாப நிலையிலேயே உள்ளது. குறிப்பாக என்டிபிசி, டாடா ஸ்டீல், பெல், டாடா மோட்டார்ஸ், ஐடிசி, மாருதி, கெயில் ஆகிய நிறுவனங்கள் லாப நிலையில் உள்ளது.
சர்வதேச நாணய நிதியம்
வியாழக்கிழமை சர்வதேச நாணய நிதியம் நாட்டின் வளர்ச்சி விகிதத்தை 7.2 சதவீதமாக உயர்த்தி மதிப்பிட்டது, இதன் தாக்கம் பங்குச் சந்தை வர்த்தகத்தில் அதிகளவில் தெரிவதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
நுகர்வோர் விலை பணவீக்கம்
நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்கம் பிப்ரவரி மாதத்தில் 5.26 சதவீதமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தில் இதன் அளவு 5.11 சதவீதமாக இருந்தது குறிப்பிடதக்கது. உணவு பணவீக்கத்தின் (ஜனவரி மாதத்தில் 6.13 சதவீதம்) அளவே நுகர்வோர் விலை பணவீக்கத்தில் அதிகப்படியான தாக்கத்தை எற்படுத்துவதாக தெரிகிறது.
தொழில்துறை உற்பத்தி அளவு
மேலும் பிப்ரவரி மாதத்தில் நாட்டின் தொழில்துறை உற்பத்தி அளவு 2.3 சதவீதம் என்ற கணிப்புகளில் குறைந்து 1.7 சதவீத்ததை அடையும் என இத்துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.