டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான அரசு இந்தியாவில் பல வளர்ச்சி திட்டங்களை வகுத்துள்ளதால், தற்போது உலகளவில் முதலீட்டுக்கு ஏற்ற நாடாக இந்தியா விளங்குகிறது என சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எஃப்) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டைன் லெகார்டு தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள ஒரு வணிகவியல் கல்லூரியில் அவர் நேற்று பேசியபோது, 2030ஆம் ஆண்டில் இந்தியா வல்லரசு நாடாக உருமாறும் என தெரிவித்தார்.
2030இல் இந்தியா வல்லரசு!!
இந்தியாவில் நூற்றுக்கணக்கான வளர்ச்சி திட்டங்களை உருவாக்கினாலும், 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியா வல்லரசு நாடாக உருமாற இந்தியாவில் பாலின பாகுப்பாட்டை (Gender inequality) குறைக்க வேண்டும் என கிறிஸ்டைன் லெகார்டு கூறினார்.
கிறிஸ்டைன் லெகார்டு
இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள கிறிஸ்டைன் லெகார்டு திங்கட்கிழமை டெல்லியில் உள்ள ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியில் பேசினார். அப்போது நாட்டின் வளர்ச்சி மேலும் அதிகரிக்க இந்தியாவில் இன பாகுப்பாட்டை கண்டிப்பாக குறைக்க வேண்டும் என்றார். பல நாடுகளில் பொருளாதாரத்தை மாற்றியமைப்பதில் பெண்கள் முக்கிய பங்கு வகுக்கின்றனர் என்றும் கிறிஸ்டைன் குறிப்பிட்டார்.
7.2 சதவீத வளர்ச்சி
சர்வதேச நாணய நிதியம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய சந்தையில் கிடைக்கப்பெறும் அதிகப்படியான அன்னிய முதலீடு, வர்த்தகத்திற்கான சிறந்த தளம் மற்றும் உற்பத்தி அளவை அதிகரிப்பதற்கான வழிகளை வகுத்துள்ள நிலையில் 2015ஆம் நிதியாண்டில் இந்தியா 7.2 சதவீத வளர்ச்சியை கண்டிப்பாக எட்டும் என தெரிவித்திருந்தது.
இந்தியாவில் முதலீடு
உளகளவில் அளவில் பொருளாதார நிலை மந்தமாக இருந்த போதும், முதலீட்டுக்கு ஏற்ற நாடாக இந்திய சந்தை திகழ்கிறது எனவும் அவர் கூறினார்.
ஜப்பான் மற்றும் ஜெர்மனி
2019-ம் ஆண்டில் ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய இரு நாடுகளின் ஒட்டுமொத்த வருவாய் ஜிடிபியை விட இந்தியாவின் ஜிடிபி அதிகமாக இருக்கும் என்றார். ஜிடிபி கணக்கீடு முறை 2011-12-ம் ஆண்டிலிருந்து மாற்றப்பட்டுள்ளது. இதன்படி வரும் நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.2 சதவீதமாக உயரும் என்றார்.
வேலைவாய்ப்புகள்
இந்திய மக்கள் தொகையில் 50% பேர், 25 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். இதில் ஒவ்வொரு ஆண்டும் 1.20 கோடி பேர் வேலைவாய்ப்பு சந்தையை நாடுகின்றனர். இந்நிலையில் 2030-ம் ஆண்டில் உலகில் மிக அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களைக் கொண்ட (வலிமைமிக்க) நாடாக இந்தியா திகழும் எனவும் கூறினார்.
பெண் குழந்தைகள்
பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் வாழ்க்கை முறையை மேம்படுத்த பிரதமர் மோடி சமீபத்தில் சுகன்யா சம்ரித்தி திட்டத்தை துவங்கியது, மிகவும் சிறந்த முயற்சி என தெரிவித்தார் கிறிஸ்டைன். தற்போது இத்திட்டத்தின் கீழ் சுமார் 1.83 லட்சம் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளது.
ஜன் தன் யோஜனா
நாட்டு மக்கள் அனைவருக்கும் வங்கிச் சேவை கிடைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஜன் தண் யோஜனா திட்டம் நாட்டின் பொருளாதாராத்திலும் மற்றும் வங்கித் துறையிலும் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும். மேலும் இதன் மூலம் இந்தியாவில் மூலம் ஒருங்கிணைந்த வளர்ச்சி எளிதாக சாத்தியப்படுத்த முடியும் என தெரிவித்தார்.