மும்பை: அமெரிக்க பெடரல் வங்கியின் 2 நாள் கொள்கை மறுஆய்வு கூட்டத்தின் முடிவுகள் வெளிவரும் நிலையில் இந்திய பங்குச் சந்தை 100 புள்ளிகள் வரை சரிவை கண்டது.
புதன்கிழமை வர்த்தகம் துவங்கி சில நொடிகளிலேயே சென்செக்ஸ் சரிய துவங்கியது. இதனிடையில் மதியம் 2 மணியளவில் சுமார் 137.23 புள்ளிகள் வரை சரிந்து சென்செக்ஸ் குறியீடு 28,601.63 புள்ளிகளை எட்டியது.
சென்செக்ஸ்
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் 300 புள்ளிகள் வரை உயர்ந்த மும்பை பங்குச்சந்தை, இன்று 130 புள்ளிகள் வரை சரிந்தது. இதனால் சந்தையின் முக்கிய நிறுவனங்களான இன்போசிஸ், ஐடிசி, பார்தி ஏர்டெல், பெல், டாடா மேட்டார்ஸ், என்டிபிசி போன்றவை அதிகளவிலான சரிவை சந்தித்தது.
நிஃப்டி
மும்பை பங்குச்சந்தையை போலவே நிஃப்டியும் இன்று சரிவை கண்டது. மதிய நேர வர்த்தகத்தில் நிஃப்டி 35 புள்ளிகள் வரை சரிந்து 8,685 புள்ளிகளை எட்டியது.
வட்டி உயர்வு
அமெரிக்க பெடரல் வங்கி, அரசு பத்திரங்கள் மீதான வட்டி விகிதத்தை உயர்த்தினால் இந்திய பங்குச்சந்தையில் மிகப்பெரிய அளவிலான பாதிப்பு உண்டாகும். மேலும் இந்திய பங்குச்சந்தையில் முதலீட்டின் அளவு அதிகளவில் குறையும் என சந்தை வல்லுனர்கள் தெரிவித்தனர்.
லாபமடைந்த நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஹீரோ மோட்டோ கார்ப், கெயில், ஹெச்டிஎஃப்சி, சிப்லா, ரிலையன்ஸ், டாடா பவர், ஐசிஐசிஐ வங்கி, சன் பார்மா ஆகிய நிறுவனங்கள் உயர்வை கண்டு வருகிறது.
வங்கித்துறை
ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை குறைத்த பிறகு எந்த ஒரு வங்கியும் கடனுக்கான வட்டி வகிதத்தை குறைக்கவில்லை. இதனால் பொது மற்றும் தனியார் வங்கிகள் அதிகளவிலான லாபத்தை பெற்று வருகிறது.
மேலும் இன்றைய வர்த்தகத்தில் வங்கித்துறை பங்குகள் 161.72 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.