பெங்களுரூ: இந்தியாவில் 25 தேசிய வங்கிகள் மோசடியாளர்களின் மூலம் 12,620 கோடி ரூபாய் பணத்தை இழந்துள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
அரசு வங்கி ஊழியர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நிறுவனங்கள் அல்லது தனிநபர்களுடன் இணைந்து இத்தகைய மோசடிகளில் ஈடுப்படுவதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
12,620 கோடி ரூபாய்
கடந்த 4 வருட காலத்தில் 25 வங்கிகள் மோசடியாளர்களுக்கு கடன் அளித்ததன் மூலம் சுமார் 12,260 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளது.
குறிப்பாக கர்நாடகாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் 5 வங்கிகள் 2,060.75 கோடி ரூபாய் மதிப்பிலான மோசடிகளைச் சந்தித்துள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
கர்நாடகா வங்கிகள்
கனரா வங்கி, விஜயா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, சிண்டிகேட் வங்கி மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர் ஆகிய வங்கிகள் கர்நாடகாவை தலைமையிடமாக கொண்டு செயல்படுபவை.
வழக்குகள்
இத்தகைய மோசடிகளுக்கு எதிராக வங்கி நிர்வாகம் சுமார் 4,845 வழக்குகள் பதிவு செய்துள்ளது. இவ்வழக்குகளில் வங்கி ஊழியர்களுக்கு மறைமுகமான தொடர்பு இருக்கலாம் என நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
தொலைத் தொடர்பு நிறுவனம்
புதன்கிழமை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, விஜயா பாங்க் மற்றும் கனரா வங்கி ஆகியவை இணைந்து அகமதாபாத் நகரைச் சேர்ந்த தொலைத் தொடர்பு நிறுவனத்தின் மீது 126.4 கோடி ரூபாய் மதிப்பிலான மோசடி வழக்கு பதிவு செய்துள்ளது.
நிதியமைச்சகம்
இத்தகைய மோசடிகளைத் தடுக்க நிதியமைச்சகம் தனிக் குழு அமைக்கத் திட்டமிட்டுள்ளது. தனியார் வங்கிகளோடு ஒப்பிடுகையில் தேசிய வங்கிகளில்தான் அதிக அளவில் மோசடிகள் நடப்பதாகவும் நிதியமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.