மும்பை: சர்வதேச நாணய நிதியத்திற்கு அளிக்க வேண்டிய தவணை தொகையைச் செலுத்த கிரீஸ் நாட்டில் பணம் இல்லை என்று இந்நாட்டு அரசு, வெளிப்படையாக அறிவித்துவிட்ட நிலையில் ஐரோப்பிய சந்தையில் இருந்து இந்திய சந்தைக்குக் கிடைக்கப்பெறும் முதலீடு அனைத்தும் குறைந்ததுள்ளது.
உள்நாட்டில் சில்லறை முதலீட்டாளர்களின், முதலீடு அதிகளவில் குறைந்ததால், மும்பை பங்குச் சந்தையின் வர்த்தக நிலை அதிகளவில் பாதித்தது.
மும்பை பங்குச் சந்தை
திங்கட்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் 314 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் அதிகளவில் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று சந்தை மேன்மை அடையும் என அனைத்து தரப்பினரும் அதிகளவில் நம்பினர்.
ஆனால் இன்றும் சந்தை சரிவைச் சந்தித்தது முதலீட்டாளர்களை வருத்தம் அடையச் செய்துள்ளது.
சென்செக்ஸ்
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு காலை வர்த்தகம் துவக்கம் முதலே சரிவை சந்திக்கத் துவங்கியது. இதன் படி மதிய வேளையில் இதன் அளவு மேலும் அதிகரித்து 135 புள்ளிகள் வரை சரிந்தது.
வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 112 புள்ளிகள் சரிவுடன் 27,531.49 புள்ளிகளை அடைந்தது.
நிஃப்டி
மும்பை பங்குச் சந்தையைப் போல் நிஃப்டியும் இன்றைய வர்த்தகத்தில் 30.90 புள்ளிகள் சரிந்து 8,339.35 புள்ளிகளை அடைந்தது.
உலகச் சந்தைகள்
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் ஜப்பான், சீனா மற்றும் ஹாங்காங் சந்தைகள் இன்று உயர்வுடன் துவங்கி, உயர்வுடனே முடிவடைந்துள்ளது.
கிரீஸ் நாட்டின் அறிவிப்பால் ஐரோப்பிய சந்தையில் பிரட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் சரிவில் வர்த்தகம் செய்து வருகிறது.
தங்கம் விலை
இன்றைய வர்த்தகத்தில் 24 கேரட் தங்கம் விலை கிராமிற்கு 5 ரூபாய் அதிகரித்து 2,757 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 22 கேரட் தங்கத்தின் விலை கிராமிற்கு 5 ரூபாய் அதிகரித்து 2,578 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் 1 கிலோ பார் வெள்ளியின் விலை 39,285 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
டாலர் மதிப்பு
இந்திய சந்தையில் டாலர் மற்றும் யூரோ முதலீடு இன்று அதிகளவில்ல குறைந்ததால், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 0.35 பைசா சரிந்து 63.95 ரூபாய் வரை குறைந்துள்ளது.
நேற்று நாணய சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.60 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கத்து.