மும்பை: நாட்டின் நிலவும் பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் உணவு பொருட்கள் உற்பத்தி அதிகளவில் பாதித்துள்ளது. மேலும் 2015-16ஆம் வருடத்திற்கான பருவ மழை அளவை மத்திய அரசு 88 சதவீதமாகக் கணித்துள்ளது.
90 சதவீதத்திற்குக் குறைவாக இருந்தால் நாட்டின் உணவு பற்றாக்குறை அதிகரித்து நாட்டில் பஞ்சம் நிலவும் எனப் பொருள் என்பதை இன்று நாணயக் கொள்கை வெளியீட்டில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்தார். இதன் காரணமாகவே இந்திய சந்தையில் வர்த்தகம் அதிகளவில் குறைந்து காணப்பட்டது.
இதனால் சென்செக்ஸ் குறியீடு ஓரே நாளில் 660 புள்ளிகள் வரை சரிந்து 27,188 புள்ளிகளை எட்டி சந்தை மிகப்பெரிய சரிவுடன் முடிவடைந்தது.
ஐரோப்பிய சந்தை
அதுமட்டும் அல்லாமல் கிரீஸ் நாட்டில் நிலவும் பொருளாதாரப் பிரச்சனைகளால், ஐரோப்பிய சந்தைகளில் இருந்து இந்திய சந்தைக்குக் கிடைக்கப்பெறும் அதிகளவிலான முதலீடு குறைந்துள்ளது.
ஜெர்மனி
மேலும் கிரீஸ் மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கு மத்தியில் நடந்து வரும் பேச்சுவார்த்தை மந்தமாக உள்ளதால், ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் மிகவும் மந்தமாகச் செயல்பட்டு வருகிறது.
ஆர்பிஐ
செவ்வாய்க்கிழமை காலையில் ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை வெளியீடுகளால் வங்கித்துறை சார்ந்த நிறுவனங்கள் அனைத்தும் இன்று சரிவை தழுவியது.
ரெப்போ விகிதம்
2015ஆம் ஆம் ஆண்டில் நாட்டின் பணவாட்ட நிலையைக் குறைக்கவும், சில்லறை பணவீக்கத்தை மேம்படுத்தவும், பொருளாதார நிலையைச் சீர்ப்படுத்தவும் ரிசர்வ் வங்கி 3வது முறையாக வணிக வங்கிகளுக்கு அளிக்கப்படும் கடனுக்கான வட்டி வகிதத்தை 0.25% குறைத்து 7.25 சதவீதமாக அறிவித்துள்ளது.
மும்பை பங்குச் சந்தை
பருவநிலை மாற்றம், ஐரோப்பிய சந்தையின் நிலை, மற்றும் ரிசர்வ் வங்கியின் வட்டி வகித மாற்றம் போன்றவை மும்பை பங்குச் சந்தையை இன்று அதிகமாத பாதித்தது.
சென்செக்ஸ்
இதன் எதிரொலியாக மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் குறியீடு செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் சுமார் 660.61 புள்ளிகள் வரை சரிந்து 27,188.38 புள்ளிகள் வரை சரிந்தது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும் மிகப்பெரிய அளவிலான சரிவைச் இன்று சந்தித்தது. இதனால் நிஃப்டி குறியீடு 196.95 புள்ளிகள் சரிந்து 8,236.45 புள்ளிகளை அடைந்தது.
நஷ்டமடைந்த நிறுவனங்கள்
சந்தையின் டாப் 30 நிறுவனங்களில் இன்று எஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கி, ஐடிசி, ஹிரோ மோட்டோ கார்ப், ஐசிஐசிஐ வங்கி, சிப்லா, பஜாஜ் ஆட்டோ போன்றவை அதிகளவிலான சரிவை சந்தித்தது.
லாபமடைந்த நிறுவனங்கள்
டாப் 30 நிறுவனங்களில் பார்தி ஏர்டெல் நிறுவனம் மட்டுமே இன்று உயர்வைச் சந்தித்துள்ளது.