டெல்லி: இந்தியாவில் தங்க நகைகளுக்கான ஹால்மார்க் தரம் உயர்ந்தால் அடுத்த 5 வருடத்தில் ஏற்றுமதி அளவு சுமார் 400% அதிகரிக்கும் என வோல்டு கோல்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.
இன்றைய நிலையில் இந்தியாவில் வெறும் 30 சதவீத தங்க நகைகள் தான் ஹால்மார்க் தரத்தை ஈடு செய்வதாக இவ்வமைப்பு தெரிவித்துள்ளது. அப்போ மற்றவை எல்லாம்?
வோல்டு கோல்டு கவுன்சில்
WGC எனப்படும் வோல்டு கோல்டு கவுன்சில் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச சந்தையில் இந்திய நகைகளின் மீதான தரம் மற்றும் தூய்மை உயர்ந்தால் 2020ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தங்க நகைகளின் மதிப்பு 40 பில்லியன் டாலராக உயரும் என இவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
தங்கம் பணமாக்க திட்டம்
2013ஆம் ஆண்டில் இதன் அளவு வெறும் 8 பில்லியன் டாலராக இருந்தது. மேலும் தங்கத்தின் தரம் உயரும் போது மத்திய அரசின் தங்கம் பணமாக்க திட்டம் சர்வதேச சந்தையில் வலுவடையும் என்றும் தனது அறிக்கையில் WGC அமைப்பு தெரிவித்துள்ளது.
22,000 டன் தங்கம்
இந்திய வீடுகளில் சுமார் 22,000 டன் தங்கம் உள்ளதாகவும், இதில் 600 டன் தங்கம் ஒவ்வொரு வருடமும் தங்க நகைகள் செய்வதில் புழங்குவதாகவும் வோல்டு கோல்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.
ஏற்றுமதி பாதிப்பு
இந்நிலையில் இந்திய சந்தையில் தங்க நகைகளின் தூய்மை பல இடங்களில் வித்தியாசமாக உள்ளதால், இத்துறை ஏற்றுமதி 10-15 சதவீதம் பாதிக்கப்படுகிறதாகத் தெரிவித்துள்ளது.