மும்பை: இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையை உலுக்கிய 14,000 கோடி ரூபாய் ஊழல் வழக்கில் சிக்கிய சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனர் ராமலிங்க ராஜூ மற்றும் இவ்வழக்கில் தொடர்புடைய 11 பேர் செய்த முறைகேடான உள் நிறுவன வர்த்தக மோசடியை கண்டித்துச் செபி அமைப்பு 45 நாட்களுக்குள் 1802.81 கோடி ரூபாயைச் செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.
12 சதவீத வட்டி
இதுகுறித்துச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி வெளியிட்ட அறிவிப்பில், 45 நாட்களுக்குள் மோசடி தொகையை 12 சதவீத வட்டி விகிதத்தில் ஜனவரி 7, 2009ஆம் ஆண்டு முதல் கணக்கிட்டுச் செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.
45 நாட்கள்
இந்நிலையில் ராமலிங்க ராஜூ மற்றும் 11 பேர் அடுத்த 45 நாட்களுக்குள் 1802.81 கோடி ரூபாய் செலுத்த வேண்டும். இதில் சத்யம் கம்பியூட்டர்ஸ் நிறுவனத்தின் ஹோல்டிங் நிறுவனமான எஸ்ஆர்எஸ்ஆர் ஹோல்டிங் நிறுவனம் 1,258.88 கோடி ரூபாயும், மேலும் 11 பேர் 543.93 கோடி ரூபாயும் (இதில் ராமலிங்க ராஜூ ரூ.26.62 கோடி, ராம ராஜு 29.54 கோடி ரூபாய்) செலுத்த வேண்டும்.
ஜனவரி 2009
இந்திய பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய பங்கு வகிக்கும் ஐடித்துறையில் நடந்த மிகப்பெரிய மோசடி கடந்த 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளிச்சத்திற்கு வந்தது.
சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான ராமலிங்க ராஜூ உட்பட 12 பேர் இந்நிறுவன கையேடுகளை மாற்றியும், நிறுவன லாபத்தைக் குறைவாகக் காட்டியும் பல ஆயிரம் கோடி ரூபாய் சுருட்டினர்.
ஊழல் வழக்கு..
சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் முறையற்ற கணக்கு பதிவின் மூலம் பல கோடி ரூபாயை இந்நிறுவன உயர் அதிகாரிகள் மோசடி செய்ததைக் கார்பெரேட் அஃபேர்ஸ் அமைச்சகத்தின் தீவிர மோசடி புலனாய்வு அலுவலகம், நிறுவன சட்டங்களின் அடிப்படையில் சுமார் 7 வழக்குப் பதிவு செய்தது.
முக்கியக் குற்றவாளிகள்
இவ்வழக்கில் முக்கியக் குற்றவாளிகளாகச் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் தலைவர் ராமலிங்க ராஜூ மற்றும் நிர்வாக இயக்குநரான இவரது தம்பி ராம ராஜூ ஆகியோர் மீது வழக்குகள் தொடர்ச்சியாகப் பதிவு செய்யப்பட்டது.
அதன்பின் இவ்வழக்கின் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
சிபிஐ
ராமலிங்க ராஜூ மற்றும் இந்நிறுவனத்தின் பிற உயர் அதிகாரிகளின் மீதான கைது நடவடிக்கையின் பின் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ விசாரணையில் சுமார் 3 குற்றப் பத்திரிக்கை வெளியிடப்பட்டது.
முதல் தீர்ப்பு
இவ்வழக்கின் முதல் தீர்ப்பில் ராமலிங்க ராஜூ மற்றும் ராம ராஜுவிற்கு 6 மாத சிறை தண்டனையும், மற்ற 11 பேருக்கு அபராதங்களும் விதிக்கப்பட்டது.
14 வருடத் தடை
சத்யம் நிறுவனத்தின் நிறுவனரான பி.ராமலிங்க ராஜூ மற்றும் 4 உயர் அதிகாரிகளுக்கு அடுத்த 14 வருடத்திற்குச் சந்தையில் இறங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 2 நிறுவனங்கள் மற்றும் 5 பேருக்கு பங்குச் சந்தை மற்றும் முதலீட்டுச் சந்தையில் இறங்க 7 வருடம் செபி தடைவித்துள்ளது.
நிறுவனத்தின் நிலை
அதன் பின் இந்நிறுவனம் நிலைமை தலைகீழாக மாறியது. இந்நிறுவனத்தின் ஊழியர்கள் நிர்கதியாக்கப்பட்டனர், பங்கு விலை தொடர் சரிவு எனப் பல சிக்கல்களைச் சந்தித்தது. சில மாதங்களுக்குப் பிறகு இந்நிறுவனம் ஏலத்தில் விடும் அளவிற்கு வந்தது, பின்பு அதை டெக் மஹிந்திரா நிறுவனம் கைப்பற்றியது.
சமுக வலைத்தள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..