மும்பை: செவ்வாய்க்கிழமை வர்த்தகம் துவங்கும் முதலே 200 புள்ளிகள் சரிவுடன் ஆரம்பமான மும்பை பங்குச்சந்தையின் வர்த்தகம், ரிசர்வ் வங்கியின் வட்டிக் குறைப்பு வெளியான சில நிமிடங்களில் சென்செக்ஸ் உயர்வடையத் துவங்கியது.
இன்று ஓரே நாளில் சென்செக்ஸ் குறியீடு சுமார் 450 புள்ளிகள் வரை உயர்ந்து 26,000 புள்ளிகளை எட்டியது குறிப்பிடத்தக்கது.
ஆனால் வர்த்தக முடிவில் பன்னாட்டு முதலீட்டாளர்களின் அதிகளவிலான பங்கு விற்பனையின் காரணமாகச் சென்செக்ஸ் குறியீடு 161 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 25,778 புள்ளிகளை எட்டி செவ்வாய்க்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும் இன்று 47.60 புள்ளிகள் உயர்ந்து 7,843.30 புள்ளிகளை எட்டியுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் எச்டிஎப்சி, எஸ்பிஐ, ஐசிஐசிஐ போன்ற அனைத்து வங்கி நிறுவனங்களும் இன்றும் உயர்வடைந்துள்ளது. இதேவேளையில் பார்மா துறை நிறுவனங்களான லூப்பின், சன் பார்மா, சிப்லா ஆகிய நிறுவனங்கள் குறைந்தபட்சமாக 0.77 சதவீதம் வரை குறைந்துள்ளது.