பெங்களூரு: இந்தியாவில் 3வது மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமாகக் கருதப்படும் விப்ரோவில் பாலின பாகுபாடு, சமமற்ற ஊதியம், காரணமில்லாமல் பணியாளர்கள் வெளியேற்பு போன்ற கொடுமைகள் உள்ளதாக, இந்நிறுவனத்தை எதிர்த்துப் பெண் ஊழியர், ஸ்ரேயா உகில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.
இந்த வழக்கில், தான் அனுபவித்த கொடுமைகளுக்கு 1 மில்லியன் பவுண்டு நஷ்ட ஈடு வேண்டும் எனவும் ஸ்ரேயா (39) தெரிவித்தார். ஸ்ரேயா உகில் தற்போது விப்ரோ நிறுவனத்தை விட்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டன் அலுவலகம்
பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனத்தின் லண்டன் அலுவலகத்தில் 39 வயதான ஸ்ரேயா உகில் பாலின பாகுபாடு, சமமற்ற ஊதியம், துன்புறுத்தல் (harassment) மற்றும் காரணமில்லாமல் பணியாளர்கள் வெளியேற்பு போன்ற கொடுமைகளைச் சந்தித்ததாகத் தெரிவித்துள்ளார்.
1 மில்லியன் பவுண்ட்
இதனை எதிர்த்து விப்ரோ நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்த ஸ்ரேயா 1 மில்லியன் பவுண்ட் நஷ்டஈடு கேட்டு சென்டரல் லண்டன் ஊழியர்கள் நீதிமன்றத்தில் தனது வழக்கைப் பதிவு செய்துள்ளார்.
அடிமைகள்..
மேலும் விப்ரோ நிறுவனம் தனது பெண் ஊழியர்களை அடிமைகளைப் போல் நடத்துவதாகவும் தனது குற்ற அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் ஸ்ரேயா.
கட்டுக்கதை
மேலும் விப்ரோ நிர்வாகம் இந்நிறுவனத்தின் முன்னாள் துணை தலைவர் மற்றும் குளோபல் பிபீஓ தலைவர் மனோஜ் புன்ஜா உடன் இணைத்துப் பல கட்டுக்கதைகள் வெளியேற்றியதாகவும் ஸ்ரேயா உகில் தெரிவித்தார்.
மனோஜ் புன்ஜா ஏற்கனவே திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மனோஜ் புன்ஜா
விப்ரோ நிறுவனத்தின் பல முக்கியப் பதவிகளில் பணியாற்றிய மனோஜ் புன்ஜா சமீபத்தில் இந்நிறுவனத்தை விட்டு வெளியேறி மைக்ரோலாண்டு லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகத் துணை இயக்குனராகப் பணியாற்றி வருகிறார்.
ஸ்ரேயா உகில்
விப்ரோ நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தை மேம்பாட்டுப் பிரிவின் மேலாளராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுக் கதைகளின் மூலம் நிறுவனத்தில் தன்னை "dirty goods" ஆக நடத்தப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.
விப்ரோ..
இதுகுறித்து விப்ரோ நிறுவனம் முழுமையான தகவல்களை அளிக்க மறுத்தாலும், ஸ்ரேயா உகில் குற்றச்சாட்டுகள் அர்த்தமற்றவையாகவும், நிறுவன சட்டங்களுக்குப் பொருந்தாத வகையில் இருப்பதாக உள்ளது எனக் கூறியுள்ளது.
இதனால் ஸ்ரேயா உகில் அவர்களின் வழக்கை எதிர்த்து விப்ரோ நிர்வாகம் எதிர் வழக்குத் தொடுக்கவும், அவரது செயல் மற்றும் குற்றச்சாட்டுகளைக் கண்டிக்கவும் முடிவு செய்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.