மும்பை: வாரத்தின் கடைசி நாள் வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை காலை முதல் மந்தமான வர்த்தகத்தைப் பெற்று வந்த நிலையில், இந்தியாவில் எரிபொருள் தேவையின் அளவு 10 வருட உயர்வை எட்டியுள்ளதற்கான செய்திகள் வெளியானது இதனால் சென்செக்ஸ் குறியீடு 200 புள்ளிகள் வரை திடீரென உயர்ந்தது.
ஒரு நாட்டின் எரிபொருள் (பெட்ரோல், டீசல், போன்றவை..) தேவை அதிகரித்தால், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் உள்ளதாகப் பொருள்.
நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்புகளான மேகியின் சோதனை முடிவுகள் இந்நிறுவனத்திற்குச் சாதகமாக அமைந்தது, இதனால் இந்நிறுவனப் பங்குகள் சுமார் 7 சதவீதம் உயர்ந்து. இதனால் எஃப்எம்சிஜி துறை சார்ந்து நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்றது.
மேலும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் ஸ்வராஜ் அட்டோமொபைல் நிறுவனத்தில் வைத்திருந்த 71.19 சதவீத பங்குகள் முழுமையாக 24.84 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதால் மஹிந்திரா நிறுவனப் பங்குகள் 1.02 சதவீதம் வரை உயர்ந்தது.
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 204.46 புள்ளிகள் உயர்ந்து 27,214.60 புள்ளிகளை எட்டியுள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 58.65 புள்ளிகள் உயர்ந்து 8,238.15 புள்ளிகளை எட்டி இந்த வாரப் பங்குச்சந்தை வர்த்தகம் முடிவிற்கு வந்தது.