மும்பை: உலகின் 2வது மிகப்பெரிய பொருளாதார நாடாக விளங்கும் சீனாவின் ஐடிபி அளவுகள் 6.9 சதவீதமாகக் குறைந்ததை அடுத்து இந்திய சந்தையில் இன்று அதிகளவிலான முதலீடு குவிந்தது.
இதன் காரணமாகத் திங்கட்கிழமை வர்த்தகம் துவங்கும் முதலே மும்பை பங்குச்சந்தை சிறப்பான வர்த்தகத்தைப் பெற்றது. மேலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் சனிக்கிழமை வெளியிடப்பட்டதால், திங்கட்கிழமை வர்த்தகத்தில் இந்நிறுவனத்தின் பங்குகள் சுமார் 5 சதவீதம் வரை உயர்ந்தது.
அதேபோல் எச்சிஎல் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் முதலீட்டாளர்களை ஏமாற்றினாலும் இந்நிறுவனத்தின் பங்குகள் சுமார் 2.12 சதவீதம் வரை உயர்ந்தது.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 150.32 புள்ளிகள் உயர்ந்து 27,364.92 புள்ளிகளை எட்டியது. அதேபோல் நிஃப்டி குறியீடு 36.90 புள்ளிகள் உயர்ந்து 8,275.05 புள்ளிகளை அடைந்து திங்கட்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.