மும்பை: புதன்கிழமை பங்குச்சந்தை வர்த்தகம் துவங்கும் முதலே ஆசிய சந்தையில் நிலவிய மந்தமான வர்த்தகத் துவக்கத்தால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் குறைவான வர்த்தகத்தைப் பதிவு செய்தது.
இதனால் சென்செக்ஸ் குறியீடு இன்றைய வர்த்தக முடிவில் சுமார் 213 புள்ளிகள் வரை சரிந்தது.
ஆசிய சந்தை
காலை வர்த்தகம் துவங்கும் முதலே ஆசிய சந்தையில் குறிப்பாகச் சீனா மற்றும் ஹாங்காங் சந்தையில் மந்தமான வர்த்தகம் நிலவியது. இதனால் இந்திய சந்தையிலே வர்த்தகம் துவங்கும் முதலே சரிவை தழுவியது.
சீனா மற்றும் ஹாங்காங் சந்தைகள்
இன்றைய வர்த்தக முடிவில் சீன சந்தை 1.72 சதவீத சரிவு, ஹாங்காங் சந்தை 0.80 சதவீத சரிவும் பதிவு செய்திருந்தது. இதன் பின் ஜப்பான் நிக்கி சந்தைச் சரிவுடன் துவங்கினாலும் வர்த்தக முடிவில் 0.67 சதவீத உயர்வுடன் முடிந்தது.
அமெரிக்க முதலீட்டாளர்கள்
ஆசிய சந்தையில் நிலவிய இந்த மந்த நிலையால் அமெரிக்க முதலீட்டாளர் இந்திய சந்தையில் அதிகளவிலான முதலீடு குறைந்தது. இதுமட்டும் அல்லாமல் பெடரல் வங்கியின் மாலை நேர அறிக்கையை எதிர்பார்த்தும் தங்களது முதலீட்டை அதிகளவில் குறைத்துக்கொண்டனர்.
எப் அண்ட் ஓ
மேலும் அக்டோபர் மாதத்திற்கான எப் அண்ட் ஓ ஆர்டர்கள் நாளை முடிவாக உள்ளதால், உள்நாட்டுச் சந்தை முதலீட்டாளர்கள் இன்று இந்திய பங்குச்சந்தையில் இருந்து அதிகளவிலான முதலீட்டைக் குறைத்தனர்.
மும்பை பங்குச்சந்தை
ஆசிய சந்கை, அமெரிக்க முதலீட்டாளர்கள் மற்றும் எப் அண்ட் ஓ ஆர்டர்கள் ஆகிய காரணங்களால் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சுமார் 213.68 புள்ளிகள் சரிந்து 27,039.76 புள்ளிகளை எட்டியது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும் இன்று 61.70 புள்ளிகள் குறைந்து 8,171.20 புள்ளிகளை எட்டி புதன்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.
வங்கித்துறை
இன்றைய வர்த்தகத்தில் வங்கித்துறை பங்குகள் சுமார் 513.67 புள்ளிகள் குறைந்து 19,811.30 புள்ளிகளை எட்டியது குறிப்பிடத்தக்கது. இதில் ஆக்சிஸ் வங்கி இன்று ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் சுமார் 7.45 சதவீதம் வரை சரிந்தது.