மும்பை: உள்நாட்டு தேவைக் குறைவு மற்றும் சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான முதலீடு சரிவு ஆகிய காரணங்களால் இந்திய சந்தையில் இன்று தங்கம் விலை கிராமிற்கு 23 ரூபாய் சரிந்துள்ளது.
இதற்குச் சாதகமாகத் தீபாவளி அன்று மத்திய அரசு தங்கம் மீதான 2 முதலீட்டுத் திட்டங்களையும், அசோக சக்கரச் சின்னம் அச்சடிக்கப்பட்ட தங்க நாணயங்களையும் வெளியிட உள்ளது.
வாரத்தின் கடைசி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 181.31 புள்ளிகள் குறைந்து 26,656.83 புள்ளிகளை அடைந்தது, அதேபோல் நிஃப்டி குறியீடு 45.95 புள்ளிகள் சரிந்து 8,065.80 புள்ளிகளை எட்டியது.
இந்நிலையில் காலை வர்த்தகம் துவக்கம் முதலே நாணய சந்தையில் முதலீடு தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், 24 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 23 ரூபாய் சரிந்து 2,685 ரூபாய்க்கும், 22 கேரட் ஒரு கிராம் தங்கம் 2,510 ரூபாய்க்கும் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 980 ரூபாய் குறைந்து 36675.00 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
விழாக்காலம் என்பதால் சில்லறை முதலீட்டாளர்கள் தங்களின் நிதித் தேவைக்கான பங்குச்சந்தை மட்டும் அல்லாமல் நாணயச் சந்தையும் அதிகளவில் முதலீட்டைக் குறைத்து வருகின்றனர். இதன் காரணமாகவே தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.