மும்பை: சர்வதேச சந்தைகளில் நிலவும் மந்தமான பொருளாதாரச் சூழ்நிலைகள் காரணமாக உள்நாட்டுச் சந்தையில் இருக்கும் ப்ளு சிப் நிறுவனங்களின் லாபம் மற்றும் வர்த்தக அளவுகள் அதிகளவில் குறைந்தது. இதன் காரணமாகப் புதன்கிழமை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்கத் துவங்கியுள்ளனர்.
இதனால் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் குறியீடு இன்று ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் சுமார் 380 புள்ளிகள் வரை சரிந்துள்ளது.
இன்றைய வர்த்தகத் துவக்கத்தில் நிலையான வர்த்தகத்தைப் பெற்று வந்த சென்செக்ஸ் குறியீடு 12 மணி முதல் அன்னிய முதலீட்டாளர்களின் தொடர் பங்கு விற்பனையின் காரணமாகப் பங்குச்சந்தை சரிவடைந்தது.
மேலும் புதன்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 381.95 புள்ளிகள் குறைந்து 25,482.52 புள்ளிகளை எட்டியது. அதேபோல் நிஃப்டி குறியீடு 105.75 புள்ளிகள் சரிந்து 7,731.80 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
இன்று பொதுத்துறை நிறுவனங்களான கெயில், கோல் இந்தியா மற்றும் என்டிபிசி நிறுவனங்கள் உயர்வடைந்த நிலையில், சன் பார்மா, பார்தி ஏர்டெல், ஐடிசி, டாடா மோட்டார்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், பஜாஜ் ஆட்டோ, விப்ரோ, சிப்லா போன்ற முன்னணி நிறுவனங்கள் சரிவை சந்தித்தது.
மேலும் மாருதி, பெல், ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, டாடா ஸ்டீல் இன்போசிஸ் போன்ற முக்கிய நிறுவனங்கள் 2% அதிகமான அளவில் சரிவை சந்தித்தது.