மும்பை: ஆசிய சந்தையில் நிலவும் மந்தமான வர்த்தகம் மற்றும் மும்பை பங்குச் சந்தையில் நவம்பர் மாதத்திற்கான ஆர்டர் முடிவு ஆகியைவை இன்று முதலீட்டாளர்களை அதிகளவில் பங்குகளை விற்பனை செய்யும் சூழலுக்கு தள்ளியது.
இதனால் சென்செக்ஸ் குறியீடு சரிவுடன் துவங்கி இன்று முழுவதும் கணிசமான வர்த்தகத்தை மட்டுமே பெற்றுவந்தது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் சரிவுடன் முடிவடைந்தது.
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 43.60 புள்ளிகள் சரிவில் 25,775.74 புள்ளிகளை எட்டியது. அதேபோல் நிஃப்டி குறியீடு 17 புள்ளிகள் சரிவில் 7,831.60 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் நிறைவடைந்தது.
இன்றைய வர்த்தகத்தில் சந்தையின் டாப் 30 நிறுவனங்களில் ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஹெச்டிஎப்சி, ரிலையன்ஸ், பார்தி ஏர்டெல், லூபின், ஹீரோமோட்டோ கார்ப், ஒஎன்ஜிசி ஆகிய நிறுவனங்கள் மட்டுமே கணிசமான உயர்வைச் சந்தித்தது.
மேலும் இன்போசிஸ், டிசிஎஸ், டாடா ஸ்டீல், பஜாஜ் ஆட்டோ, என்டிபிசி போன்ற முக்கியமான நிறுவனங்கள் 1 சதவீதத்திற்கு அதிகமான சரிவைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச சந்தையில் இன்று ஜப்பான் மற்றும் சீன சந்தையை மட்டுமே மிகக் குறைவான வளர்ச்சியை அடைந்தது. இதைத் தொடர்ந்து ஹாங்காங், ஆஸ்திரேலியா, தைவான், மும்பை பங்குச்சந்தைகள் 0.90 சதவீதத்திற்கும் அதிகளவிலான சரிவை சந்தித்தது.