மும்பை: இந்திய வங்கிகளில் அளிக்கப்படும் கடன்களுக்கான வட்டி கணக்கீட்டு முறையை மாற்றியமைக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. அதுமட்டும் அல்லாமல் வங்கிகளில் கார்ப்பரேட் கடன் அளிக்கும் அளவுகளைக் குறைத்து மக்களுக்குப் பயன்படும் வகையில் கடன்களை அளிக்க முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியான சில நமிடங்களில் மும்பை பங்குச்சந்தையில் வங்கித்துறை பங்குகள் சரிவடையத் துவங்கியது.
இதன்பின் இம்மாதம் அமெரிக்கப் பெடரல் வங்கி அறிவிக்க உள்ள வட்டி உயர்வுக்கான அறிவிப்புகளுக்காகச் சர்வதேச முதலீட்டாளர்கள் இந்தியா சந்தை மட்டும் அல்லாது சர்வதேச சந்தையிலும் குறைத்துள்ளனர். இதனால் மும்பை பங்குச்சந்தையில் அன்னிய முதலீடுகளின் அளவு குறைந்தது 4 நாட்களாக லாபகரமாக இருந்த மும்பை பங்குச்சந்தையை இன்று சரிவை தழுவியுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 51.56 புள்ளிகள் சரிந்து 26,117 புள்ளிகளை எட்டியது, அதேபோல் நிஃப்டி குறியீடு 23.55 புள்ளிகள் சரிந்து 7,931.35 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
இந்தியாவின் 3வது மிகப்பெரிய இருசக்கர வாகன விற்பனை நிறுவனமான டிவிஎஸ் மோட்டார்ஸ், சென்னையில் நிலவி வரும் தொடர் மழை வெள்ளத்தால் விற்பனை முழுவதும் பாதிக்கப்பட்டு மும்பை பங்குச்சந்தையில் இந்நிறுவனப் பங்குகள் சுமார் 4.87 சதவீதம் வரை சரிந்துள்ளது.
டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குகள் இன்று 5% சரிவுடன் 288 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது. இதேபோல் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அசோக் லேலண்ட், சுந்தரம் கிலேடன் ஆகிய நிறுவனங்கள் தேசிய பங்குச்சந்தையில் சரிவை சந்தித்தது.