மும்பை: அமெரிக்கப் பெடர்ல் ரிசர்வ் வங்கியின் வட்டி உயர்வுக்கான இதன் தலைவர் ஜெனெட் எலனின் அறிவிப்புகளும், சாதகமான சூழ்நிலையும் இன்று மும்பை பங்குச்சந்தையைப் பதம் பார்த்தது.
அதுமட்டும் அல்லாமல் இந்திய சந்தையின் மோசமான சேவை துறையின் வளர்ச்சி பங்குச்சந்தையில் மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கியது. இதனால் தொடர்ந்து 2வது நாளாக இந்திய பங்குச்சந்தை இன்று சரிவை தழுவியுள்ளது.
வியாழக்கிழமை வர்த்தகத் துவக்கம் முதல் சரிவுடன் இருந்தாலும், வர்த்தக முடிவில் சேவைத்துறையின் வீழ்ச்சி கடுமையான சரிவை உருவாக்கியது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 231.23 புள்ளிகள் குறைந்து 25,886.62 புள்ளிகளை எட்டிய 26,000 என்ற நிலையில் இருந்து கீழே இறங்கியது. அதேபோல் நிஃப்டி குறியீடும் 67.20 புள்ளிகள் குறைந்து 7,864.15 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
சில்லறை முதலீட்டாளர்கள்
மேலும் தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேசத்தில் நிலவி வரும் மழை மற்றும் வெள்ளப்பெருக்குக் காரணமாக இன்று சில்லறை முதலீட்டாளர்களின் பங்கீடு மிகவும் குறைவாக இருந்தது.
ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
அதுமட்டும் அல்லாமல் சென்னை, காஞ்சிபுரத்தை மையமாகக் கொண்டு இயங்கும் ஆட்டோமொபைல் நிறுவனங்களின் உற்பத்தி முழுமையாக முடங்கியது.
ஐடித்துறை
சென்னை மழைக்காரணத்தால் முக்கியமான ஐடி நிறுவனங்களின் செயல்பாடு முழுமையாகப் பாதித்துள்ளது. இதனால் இன்போசிஸ், டிசிஎஸ் நிறுவனப் பங்குகள் சரிவடைந்துள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து முன்னணி ஐடி நிறுவனங்கள் 10-30 சதவீத ஊழியர்கள் சென்னையை மையமாகக் கொண்டு இயங்கி வருகின்றனர். மழை மற்றும் வெள்ளம் காரணத்தால் இத்துறையின் செயல்பாடு அதிகளவில் பாதித்துள்ளது.
வங்கித்துறை
இதன் உடன் ரிசர்வ் வங்கியின் புதிய வட்டி கணக்கீடு முறை அறிவிப்பின் மூலம் ஆக்சிஸ் வங்கி, யெஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, பாங்க் ஆஃப் பரோடா மற்றும் பஞ்சாப் நேஷ்னல் வங்கிகளின் பங்குகள் அதிகளவில் பாதித்துள்ளது.
பெடரல் ரிசர்வ்
பத்து வருடங்களுக்குப் பிறகு அமெரிக்கா பெடரல் ரிசர்வ் தனது வட்டி விகிதத்தை வருகிற டிசம்பர் 15-16ஆம் தேதி அன்று மாற்ற உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான சாதகமான சூழ்நிலையும் உருவாகியுள்ளதாகப் பெடரல் ரிசர்வின் தலைவர் ஜேனெட் எலன் தெரிவித்தார்.