மும்பை: 6 நாட்கள் சரிவில் இருந்து மீண்ட மும்பை பங்குச்சந்தை, நேற்று 216 புள்ளிகள் உயர்ந்தது. பங்குச்சந்தையில் லாபகரமான சூழ்நிலை நிலைபெறும் முன்னரே வெள்ளிக்கிழமை சென்செக்ஸ் குறியீடு 208 புள்ளிகள் சரிந்து வியாழக்கிழமை உயர்வை ஈடு செய்து, இந்த வார வர்த்தகம் முடிவடைந்தது.
வாரத்தின் கடைசி நாள் வர்த்தகத்தில் நவம்பர் மாதத்திற்கான தொழிற்துறை உற்பத்தி அளவு அறிக்கை இன்று வெளியாக உள்ளதால் பங்குச்சந்தையில் இன்று மந்தமான வர்த்தகம் நிலவியது. இதேபோல் திங்கட்கிழமை நாட்டின் பணவீக்கம் குறித்த தகவல்கள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆசிய சந்தையில் இன்று சீனா, தைவான் உட்பட முக்கியச் சந்தைகளும் சரிவைச் சந்தித்தது. ஆனால் ஜப்பான் சந்தை மட்டும் இந்தியாவில் புல்லட் ரயில் அமைக்கும் 98,000 கோடி ரூபாய் திட்டத்தைக் கைப்பற்றியுள்ளதால் 0.97 சதவீதம் உயர்ந்து வெள்ளிக்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.
இந்நிலையில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 207.89 புள்ளிகள் சரிந்து 25,044.43 புள்ளிகளை எட்டியது, அதேபோல் நிஃப்டி குறியீடு 72.85 புள்ளிகளை எட்டிய 7,610.45 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்து.
மேலும் அடுத்த வாரம் அமெரிக்கப் பெடரல் வங்கி 10 வருடத்திற்குப் பிறகு தனது வட்டி விகித உயர்வை அறிவிக்க உள்ளதால் இந்திய ஆசிய சந்தை மட்டும் அல்லாமல் ஐரோப்பிய சந்தையிலும் இன்று அதிகளவிலான பங்குகள் விற்பனை செய்யப்பட்டது.
மேலும் கடந்த இரு நாட்களாக அமெரிக்கச் சந்தையில் முதலீட்டு அளவுகள் குறைந்து வருவதால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாணய சந்தையில் டாலர் மீதான முதலீடு அதிகரித்துக் காணப்படுகிறது.
இந்நிலையில் அடுத்த வாரத்தில் அமெரிக்க டாலர் மதிப்பு புதிய உச்சத்தை எட்டவும் வாய்ப்பு உள்ளது.