மும்பை: அமெரிக்கப் பெடரல் வங்கியின் வட்டி உயர்விற்கான கூட்டம் இன்று துவங்கியுள்ளதால், முதலீட்டாளர்கள் தங்களின் முதலீட்டைப் பாதுகாக்க ப்ளூ சிப் பங்குகளில் முதலீட்டை அதிகரித்தனர். இதனால் நாணய சந்தையில் முதலீட்டு அளவு குறைந்தது.
இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு 67.02 ரூபாயாகக் குறைந்துள்ளதால், அன்னிய முதலீடு மற்றும் என்ஆர்ஐ முதலீடுகள் கணிசமாக உயர்ந்தது.
சென்செக்ஸ்
இன்று காலை முதல் மந்தமாகச் செயல்பட்ட மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு மத்தியம் ஐரோப்பா சந்தை துவங்கிய பின் தொடர்ந்து உயரத் துவங்கியது இதன் காரணமாகச் சென்செக்ஸ் குறியீடு 170.09 புள்ளிகள் உயர்ந்து 25,320.44 புள்ளிகளை எட்டியது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் இன்று மோசமான வர்த்தகத்தில் இருந்து லாபகரமான வர்த்தகத்திற்கு உயர்ந்தது. செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் நிஃப்டி குறியீடு 50.85 புள்ளிகள் உயர்வுடன் 7,700.90 புள்ளிகளை எட்டியது.
சர்வதேச சந்தை
இன்றைய வர்த்தகத்தில் ஆசியா சந்தையில் ஆஸ்திரேலியா 0.36%, சீனா 0.29%, ஹாங்காங் 0.17%, ஜப்பான் 1.68% வரையில் சரிவை சந்தித்துள்ளது. இந்நிலையில் தைவான் (0.41%) மற்றும் இந்திய (0.68%) சந்தை மட்டும் கணிசமான உயர்வைச் சந்தித்துள்ளது.
ஐரோப்பிய சந்தையில் பிரட்டன், ஐரோப்பா, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிஸ் போன்ற அனைத்து சந்தைகளும் 1 சதவீதத்திற்கு அதிகாமான லாபத்தில் வர்சத்தகம் செய்யப்படுகிறது.
டாலர் - ரூபாய்
செவ்வாய்க்கிழமை நாணய சந்தை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு 67.0222 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
கடந்த 2 வாரக் காலமாக டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு தொடர் சரிவைச் சந்தித்து வருகிறது.
தங்கம் விலை
நாணய சந்தையில் முதலீடு அதிகளவில் குறைந்துள்ளதால் 1 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 10 ரூபாய் குறைந்து 2,393 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல் 24 கேரட் தங்கத்தின் விலை 11 ரூபாய் குறைந்து 2,559 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை
இன்றைய வர்த்தகத்தில் 1 கிலோ பார் வெள்ளியின் விலை 33,200 ரூபாய்க்குச் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.