மும்பை: அமெரிக்கப் பெடரல் வங்கியின் வட்டி உயர்வால் தடுமாறிக்கொண்டு இருந்த மும்பை பங்குச்சந்தை, அமெரிக்கா மற்றும் ஈரான் நாட்டின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்திகளின் மூலம் இந்திய சந்தையில் முதலீடு குவிந்தது.
எப்போதும் இல்லாத அளவிற்கு இன்றைய வர்த்தகத்தில் உள்நாட்டுச் சந்தை முதலீட்டாளர்களின் பங்கு அதிகமாக இருந்தது. மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தில் எப்போதும் ஆதிக்கம் செலுத்தும் அன்னிய முதலீட்டாளர்கள், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தையின் மந்தமான நிலையால் முதலீட்டில் பின்வாங்கினர்.
சென்செக்ஸ்
இன்றைய மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தில் உள்நாட்டு சந்தையை முதலீட்டாளர்களின் அதிகளவிலான முதலீடு சென்செக்ஸ் குறியீட்டை 230 புள்ளிகள் வரை உயர்த்தியது.
வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 216.68 புள்ளிகள் உயர்ந்து 25,735.90 புள்ளிகளை அடைந்தது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போலவே இன்று ப்ளூ சிப் பங்குகளில் அதிகளவிலான முதலீடு செய்யப்பட்டதால் நிஃப்டி குறியீடு 72.50 புள்ளிகள் உயர்ந்து 7,835.45 புள்ளிகளை அடைந்தது.
சர்வதேச சந்தை
அமெரிக்கப் பெடரல் ரிசர்வின் வட்டி உயர்வில் இருந்து மீளாத அமெரிக்கச் சந்தையின் பாதிப்பு சர்வதேச சந்தையில் குறைவாகவே இருந்தது.
வாரத்தின் முதல் வர்த்தகத்தில் ஆசிய சந்தையில் ஜப்பான் வர்த்தகம் 0.37% சரிவைச் சந்தித்த நிலையில் சீனா, ஹாங்காங், இந்தியா உயர்வுடன் முடிவடைந்தது.
தங்கம் விலை
பங்குச்சந்தை வர்த்தகம் உயர்வடைந்த நிலையில் நாணய சந்தையிலும் முதலீட்டு அளவு கணிசமாக உயர்ந்தது. இந்நிலையில் 22 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 11 ரூபாய் அதிகரித்து 2,393 ரூபாயாகவும், 24 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 11 ரூபாய் அதிகரித்து 2,559 ரூபாயாக உயர்ந்துள்ளது.
வெள்ளி விலை
சென்னை வர்த்தகச் சந்தையில் இன்று 1 கிலோ பார் வெள்ளியின் விலை 250 ரூபாய் உயர்ந்து 34,035 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது.
டாலர் ரூபாய்
இன்றைய நாணய சந்தை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 66.27 ரூபாயாக உயர்ந்துள்ளது.