மும்பை: கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையின் காரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் தொடர் விடுமுறை மற்றும் மந்தமான வர்த்தகம் நிலவுகிறது. இதன் மூலம் இந்திய சந்தையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை வர்த்தகம், துவக்கத்தில் உயர்வுடன் துவங்கினாலும் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வர்த்தகம் அதிகளவில் பாதிக்கப்பட்டது.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு பல ஏற்ற இறக்கங்களுக்குப் பின் 45.35 புள்ளிகள் உயர்வுடன் 26,076 புள்ளிகளை எட்டி செவ்வாய்க்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.
அதேபோல் நிஃப்டி குறியீடு வெறும் 3.80 புள்ளிகள் உயர்ந்து 7,928.95 புள்ளிகளை எட்டியது.
மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்களில் சன் பார்மா, எஸ்பிஐ, டிசிஎஸ், சிப்லா, ஐடிசி, எல் அண்ட் டி, டாக்டர் ரெட்டி, டாடா மோட்டார்ஸ், ஹிந்தூஸ்தான், கோல் இந்தியா, பெல் ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்தது.