டெல்லி: ஹிந்துஸ்தான் மெஷின் டூல்ஸ் எனப்படும் ஹெச்.எம்.டி நிறுவனத்தின் இயக்கப்படாத மூன்று தொழிற்சாலைகளை மூட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஹெச்.எம்.டி நிறுவனத்தின் ஹெச்எம்டி வாட்சஸ், ஹெச்எம்டி சினார் வாட்சஸ், மற்றும் ஹெச்எம்டி பியரிங்ஸ் ஆகிய தொழிற்சாலைகளை மூடவும், இதன் ஊழியர்களுக்கு 2007 சம்பள அடிப்படையில் வீஆர்எஸ் அளிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பல வருடங்களாகத் தொடர் நஷ்டத்தில் செயல்படும் ஹெச்எம்டி நிறுவனங்களின் 3 தொழிற்சாலைகளை 427.48 கோடி ரூபாய் நிதியுதவுடன் மூடவும், அதன் ஊழியர்களுக்குச் சிறப்பான வீஆர்எஸ் திட்டங்களை அளிக்கவும் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகார குழு ஹெச்.எம்.டி நிறுவனத்தை மூடுவதற்காக இறுதிக்கட்ட முடிவுகளை எடுத்தது.
மேலும் இந்நிறுவனத்தின் அசையும் அசையா சொத்துக்களை மத்திய அரசின் விதிமுறைகளின் கீழ் விற்பனையோ அல்லது குத்தகையோ விடப்படும் எனவும் அரசு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய கனரகத் தொழிற்துறையின் கீழ் சுமார் 31 நிறுவனங்கள் உள்ளது. இதில் 12 நிறுவனங்கள் சிறப்பாகவும், லாபகரமாகவும் இயங்கி வரும் நிலையில் மீதமுள்ள 19 நிறுவனங்கள் தொடர் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.
நஷ்டத்தில் இயக்கி வரும் நிறுவனங்களை மூடவும் அல்லது மிகப்பெரிய நிதியுதவியுடன் புனரமைக்கும் வாய்ப்புகளை மத்திய அரசு தேடி வருகிறது.