மும்பை: சர்வதேச பங்குச்சந்தை தாக்கத்தில் தவித்து வந்த மும்பை பங்குச்சந்தைக்கு, மேலும் ஒரு அடியாக நாட்டின் ஏற்றுமதி சரிவு அமைந்துள்ளது.
இந்தியா தொடர்ந்து 13 மாதங்களாக ஏற்றுமதி சரிவை சந்தித்து வருவதாக மத்திய அரசு அன்று மாலை தனது அறிவிப்பை வெளியிட்டது. இதனை அடுத்து சில நொடிகளில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு மள மளவெனச் சரிவைத் தழுவியது.
இதனால் சந்தையில் ப்ளூ சிப் பங்குகள் மீதான முதலீடு அதிகளவில் குறைந்து இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 266.67 புள்ளிகள் சரிந்து 24,188.37 புள்ளிகளை எட்டியது.
அதேபோல் நிஃப்டி குறியீடு 86.80 புள்ளிகள் சரிவில் 7,351.00 புள்ளிகளை அடைந்து திங்கட்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.
இன்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ், பஜாஜ், ஏசியன் பெயின்ஸ், சிப்லா, கோல் இந்தியா, ஒஎன்ஜிசி, எல் அண்ட் டி, டாக்டர் ரெட்டி, எஸ்பிஐ, பார்தி ஏர்டெல் ஆகிய முக்கிய நிறுவனப் பங்குகளும் அதிகளவிலான சரிவை எட்டியுள்ளது.
திங்கட்கிழமை வர்த்தகத்தில் சந்தையின் டாப் 50 நிறுவனங்கள் பட்டியலில் பெல் மற்றும் டாடா ஸ்டீல் நிறுவனங்கள் கணிசமான உயர்வைச் சந்தித்தது. மற்ற நிறுவனங்கள் அனைத்து சொற்பமான உயர்வை மட்டுமே சந்தித்துள்ளது.