மும்பை: புதன்கிழமை வர்த்தகம் துவக்கத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 29 பைசா சரிந்து 67.94 ரூபாய் என்ற நிலையில், இந்திய ரூபாய் மதிப்பு 28 மாத சரிவை சந்தித்தது.
இதன் பின் சீன பங்குச்சந்தையும் சரிவுடன் தனது வர்த்தகத்தை துவங்கியதால், மும்பை பங்குச்சந்தை உட்பட ஆசிய சந்தைய அனைத்தும் தொடர் சரிவை சந்திக்க துவங்கியது.
சென்செக்ஸ்
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 475 புள்ளிகள் வரை சரிந்து முதலீட்டாளர்களை பதம் பார்த்தது. இந்நிலையில், மதியம் 12 மணியளவில் சென்செக்ஸ் குறியீடு 426.03 புள்ளிகள் சரிவில் 24,053.81 புள்ளிகளை அடைந்தது 52 வார சரிவை பதிவு செய்தது.
நிஃப்டி
நிஃப்டி குறியீட்டை பார்க்கும்போது, ரியல் எஸ்டேட், பவர், எண்ணெய் மற்றும் எரிவாயு, மெட்டல், கேபிடல் கூட்டஸ் மற்றும் வங்கி பங்குகளில் அதிகளவிலான சரிவை சந்திதுள்ளதால், பாதி நாள் வர்த்தகத்திலேயே 132 புள்ளிகள் சரிந்து 7,303.10 புள்ளிகளை அடைந்துள்ளது.
முக்கிய நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் இந்தியாவின் முக்கிய நிறுவனங்களாக கருதப்படும் ஐசிஐசிஐ வங்கி, ரிலையன்ஸ், எல் அண்ட் டி, ஹெச்டிஎப்சி மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை சந்தித்துள்ளது.
சீன சந்தை
புதன்கிழமை வர்த்தகத்தில் சீன சந்தையின் CSI300 குறியீடு 0.4 சதவீதம் சரிந்து 3,209.89 புள்ளிகளை எட்டியுள்ளது, அதேபோல் ஷாங்காய் காம்போசிட் குறியீடும் 0.4 சதவீதம் குறைந்து 2,996.85 புள்ளிகளை அடைந்துள்ளது.
இதன்பின் ஹாங்காங் பங்குச்சந்தை 1.9 சதவீதம் வரை குறைந்தது குறிப்பிடத்தக்கது.
உலக சந்தைகள்
இன்றைய வர்த்தகத்தில் தைவான், சியோல், நியூசிலாந்து, இந்தோனேஷியா போன்ற அனைத்து ஆசிய சந்தைகளும் சிரிவுடனே துவங்கியுள்ளது.