சென்னை: ரூ.2 லட்சத்திற்கு மேல் நகை வாங்குபவர்கள் கட்டாயம் பான் எண் தெரிவிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை கண்டித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நகை வியாபாரிகள் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
1.1.2016 முதல் ரூ.2 லட்சத்துக்கு மேல் வியாபாரம் மேற்கொள்ளும்போது வாடிக்கையாளரின் பான் கார்டு எண் அவசியம் தேவை என்பதை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. தற்போது 85 சதவீதத்துக்கு மேலானோரிடம் பான் கார்டு இல்லாத நிலையில் மத்திய அரசு இதுபோன்ற நடைமுறையை அமல்படுத்தி உள்ளது.

ஜனவரி மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ள இந்த புதிய அறிவிப்பால், வியாபாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
ஜனவரி மாதம் முதல் புதிய விதிமுறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளதால் நகை விற்பனை தொழில் 30 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பெரும்பாலானவர்களுக்கு பான் கார்டு இல்லாததால் எங்களிடம் நகை வாங்க வருவதில்லை. இதனால் எங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதே சமயம் கள்ளச் சந்தை விற்பனை அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்கின்றனர் நகை விற்பனையாளர்கள்.

இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள கைவினைஞர்கள், ஊழியர்கள், உப தொழில் செய்பவர்கள் சுமார் 7 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள். இந்த புதிய உத்தரவை கைவிடக்கோரி மத்திய நிதி அமைச்சர், நிதித்துறைச் செயலர் ஆகியோரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதைக் கண்டித்து ஜனவரி 18 அன்று மெழுகுவர்த்தி ஏற்றி ஊர்வலம் நடத்தியதாக கூறும் நகை விற்பனையாளர்கள் மத்திய அரசின் உத்தரவை கண்டித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நகை வியாபாரிகள் இன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
வரும் பட்ஜெட்டில் மத்திய அரசே தனது உத்தரவை திரும்பப் பெறாவிட்டால், நாடு தழுவிய அளவில் பெரும் போராட்டம் நடைபெறும் என நகை வியாபாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரூ.2 லட்சம் என்ற வர்த்தக வரம்பை ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பதே நகை வியாபாரிகளின் முக்கிய கோரிக்கையாகும்.


Click it and Unblock the Notifications