சென்னை: ஆசிய சந்தையின் தொடர் 5 நாள் சரிவில் இருந்து மீண்டு இன்று லாபகரமான வர்த்தகத்தைப் பெற்றுள்ளது. அதுமட்டும் அல்லாமல் சீன யுவான் நாணயத்தின் மதிப்புக் குறைவு குறித்த பிரச்சனைகளைக் கடந்து சீனா மற்றும் ஷாங்காய் வர்த்தகச் சந்தைகள் திங்கட்கிழமை அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்றுள்ளது. இது இந்திய சந்தைக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.
இன்று காலை வர்த்தகம் துவங்கும் முதலே மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 400 புள்ளிகள் வரை உயர்ந்து பட்டையைக் கிளப்பி வருகிறது.
மும்பை பங்குச்சந்தை..
ஆசிய மற்றும் சீன சந்தை வர்த்தகத்தால் திங்கட்கிழமை இந்திய பங்குச்சந்தை கணிசமான முதலீட்டையும், வர்த்தகத்தையும் பெற்று சிறப்பான முறையில் துவங்கியது.
இந்நிலையில் வர்த்தகம் துவங்கி சில மணிநேரங்களில் சென்செக்ஸ் குறியீடு 2 சதவீதம் வரை அதிகரித்து 456 புள்ளிகள் வரை உயர்ந்து முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஏற்றுமதி..
இந்தியாவில் மேக் இன் இந்தியா திட்டம் மற்றும் ஆட்டோ மொபைல் நிறுவனங்களின் அதீத வளர்ச்சி நாட்டில் ஏற்றுமதிக்கான சாத்தியக்கூறுகளை அதிகரித்துள்ளது. இதனால் இந்திய பங்குச்சந்தையில் ஒரு பக்கம் முதலீடுகள் வெளியேறினாலும், மற்றொரு ஒருபுறம் அன்னிய முதலீட்டு அளவுகள் கணிசமாக அதிகரித்துள்ளது.
சென்செக்ஸ்
திங்கட்கிழமை சென்செக்ஸ் குறியீடு 23,275 புள்ளிகளுடன் துவங்கிய நிலையில் 10.45 மணிக்குள் 1.99 சதவீதம் வரை உயர்ந்து 457.64 புள்ளிகள் உயர்வுடன் 23,443.76 புள்ளிகளை எட்டியுள்ளது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் 151.25 புள்ளிகள் வரை உயர்ந்து 7,132.20 புள்ளிகளை அடைந்து சந்தையைக் கலக்கி வருகிறது.
நிறுவனங்களின் நிலை..
இன்றைய வர்த்தகத்தில் டாடா ஸ்டீல் நிறுவனம் 9.66 சதவீதம் உயர்வுடன் உச்சத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து அதானி போர்ட்ஸ், எஸ்பிஐ, என் அண்ட் டி, லூப்பின், ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கோல் இந்தியா, டாடா மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று வருகிறது.
சந்தையில் டாப் 30 நிறுவனங்களில் பார்தி ஏர்டெல் நிறுவனம் மட்டும் 1.15 சதவீதம் வரை சரிந்துள்ளது.