மும்பை: வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 2 மாத உயர்வை எட்டிய நிலையில், திங்கட்கிழமை வர்த்தகம் மகாசிவராத்திரி பண்டிகையையொட்டி பொது விடுமுறை காரணமாக இன்று பங்குச்சந்தை மற்றும் நாணய சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம், வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 39.49 புள்ளிகள் உயர்வில் 24,646.48 புள்ளிகளையும், நிஃப்டி குறியீடு 9.75 புள்ளிகள் உயர்வில் 7,485.35 புள்ளிகள் உயர்வடைந்தது.
கடந்த சில நாட்களாகப் பட்ஜெட் அறிவிப்புகள் மற்றும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள ரிசர்வ் வங்கியின் நாணய மறுஆய்வுக் கொள்கையில் அறிவிக்கப்பட உள்ள வட்டி விகித குறைப்புகளின் எதிர்பார்ப்புக் காரணமாகப் பங்குச்சந்தை வர்த்தகம் மிகவும் சிறப்பாக இருந்தது.
வெள்ளிக்கிழமை அமெரிக்கச் சந்தையின் வேலைவாய்ப்புத் தகவலறிக்கை இந்நாட்டுக்கு மிகவும் சாதகமாக அமைந்த நிலையில், பணவீக்கமும் அதிகளவில் குறைந்துள்ளது. இதனால் வெள்ளிக்கிழமை வர்த்ததம் அமெரிக்கச் சந்தைக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது.