பெங்களூரு: 143 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்திய பிபிஓ துறை நிறுவன பணியில் சேரும் 3 ஊழியர்களில் ஒருவர் பெண்ணாக உள்ளனர் என்று நாஸ்காம் தெரிவித்துள்ளது.
இந்திய பிபிஓ துறையில் கடந்த சில வருடங்களா பெண் ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இத்துறையில் பணியாற்றும் 37 லட்சம் ஊழியர்கள் எண்ணிக்கையில் குறைந்தபட்சம் 33 சதவீதம் பேர் பெண்கள் என நாஸ்காம் வெளியிட்ட Nasscom Diversity and Inclusion Summit 2016 அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பிபிஓ துறையில் பெண்கள்
இந்திய பிபிஓ நிறுவனங்களில் பெண்களின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காக உள்ளது, இதனால் வெறும் மனிதவள பிரிவில் மட்டும் இல்லாமல் இத்துறை வளர்ச்சியிலும் பெண்களின் பங்கு அதிகமாக இருக்கும் என இத்துறைத் தலைவர் அசோக் பாமினி தெரிவித்துள்ளார்.
2015ஆம் ஆண்டில் சரிவு
2014ஆம் ஆண்டில் இந்திய பிபிஓ துறையில் 37 சதவீதமாக இருந்த பெண் ஊழியர்களின் எண்ணிக்கை 2015ஆம் ஆண்டில் 34 சதவீதமாகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பெண்கள் சக்தி
மேற்கத்திய நாடுகளுக்கு இணையாகப் பெண்களின் சக்தி இந்திய நிறுவனங்களில் தலையெடுக்கத் துவங்கியுள்ள நிலையில், இதைப் பிற துறைகளும் முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
பதவி நிலைகள்
பிபிஓ துறையில் பெண்கள் எண்ணிக்கை அதிகளவில் இருந்தாலும் உயர் பதவிகளில் இன்னமும் ஆண்களின் ஆதிக்கம் தான் நீடிக்கிறது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைப் போல இந்திய நிறுவனங்களும் பெண்களின் ஆளுமை செய்யும் நிறுவனங்களாக மாறும். ஆனால் அதற்கு ஆண்டுகள் தேவைப்படும்.
சர்வே
நாஸ்காம் மற்றும் PWC நிறுவனங்கள் இணைந்து நடத்திய சர்வேயில் 2014ஆம் ஆண்டைவிட 2 சதவீதம் அதிகமான பெண்கள் மேலாளர் பதவியில் உள்ளனர்.
மேலும், 1.3 மில்லியன் பெண் ஊழியர்களில் 28 சதவீதம் பேர் தங்களது குடும்பத்தில் முதல் பெண் ஊழியர்களாக உள்ளனர். இத்துறைக்கு 2014ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 160 மில்லியன் டாலர் நிதியுதவி கிடைத்துள்ளது.