மும்பை: 2016ஆம் நிதியாண்டின் பங்குச்சந்தை வர்த்தகத்தைப் பார்க்கும்போதும் முதலீட்டாளர்கள் கண்களில் ரத்தக் கண்ணீர் வருவது தான் குறையாக உள்ளது.
2015ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதத்தில் இருந்து 2016ஆம் ஆண்டின் மார்ச் மாதம் வரையில், இந்திய பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சுமார் 9.36 சதவீதம் வரையிலான சரிவை சந்தித்துள்ளது.
இதனால் சந்தை முதலீட்டாளர்களின் பணம் சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் காற்றில் கரைந்துள்ளது.
7 லட்சம் கோடி
2016ஆம் நிதியாண்டில் இந்திய பங்குச்சந்தை தாறுமாறான சரிவுகளைச் சந்தித்ததால் முதலீட்டாளர்கள் சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் அளவிலான பணத்தை இழந்துள்ளனர்.
12 மாத காலகட்டத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சுமார் 9.36 சதவீதம் அளவிலான சரிவை சந்தித்து முதலீட்டாளர்களைப் பதம் பார்த்துள்ளது.
என்ன காரணம்..?
சந்தையில் நிலவும் தகவல்கள் படி சர்வதேச சந்தைகளின் வீழ்ச்சி மற்றும் அன்னிய முதலீடுகளின் வெளியேற்று ஆகியவையே இத்தகை பெரும் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணங்களாகத் தெரிவித்துள்ளது.
பெடரல் வங்கி
அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டியை உயர்த்தும்போதும், சீன சந்தை ஷட்டவுன் ஆன போதும் இந்திய கமாடிட்டி சந்தை அதிகளவில் பாதித்தது. இதனால் இந்திய பங்குச்சந்தை தத்தம் காலகட்டங்களில் சுமார் 9.36 சதவீதம் வரை சரிந்தது குறிப்பிடத்தக்கது.
முதலீட்டாளர்கள்
இதனால் 2016ஆம் நிதியாண்டின் முதலீட்டாளர்கள் ஒரு நாளில் 2,700 கோடி ரூபாய் வீதம் ஒரு வருடத்தில் சுமார் 7 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளனர்.
ரூபாய் மதிப்பு
மேலும் அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த ஒரு வருடத்தில் 3.61 ரூபாய் சரிந்து 66.26 ரூபாய் என்ற நிலையை அடைந்துள்ளது.
சீறும் மார்ச் மாதம்...
மேலும் 2016ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் மட்டும் சென்செக்ஸ் குறியீடு யாரும் எதிர்பார்க்காத வகையில் 10.17 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
கடந்த 4 வருடங்களில் இல்லாத உயர்வை இந்த மார்ச் மாதம் பெற்றுள்ளோம். இந்நிலையில் மார்ச் மாதத்தில் சென்செக்ஸ் குறியீடு 2,339 புள்ளிகளும், நிஃப்டி குறியீடு 751.35 புள்ளிகளையும் பெற்றுள்ளது.