மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய வீட்டுக் கடன் நிறுவனமான எச்டிஎப்சி நிறுவனம் மார்ச் 31ஆம் தேதி முடிவடைந்த காலாண்டில் 40 சதவீத உயர்வில் 2,607 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றுள்ளது.
கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இதன் அளவு 1,862 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
2016ஆம் நிதியாண்டில் எச்டிஎப்சி நிறுவனத்தின் மொத்த லாப அளவு 18 சதவீதம் உயர்ந்து 5,990 கோடி ரூபாயில் (2015ஆம் நிதியாண்டின் லாப அளவு) இருந்து 7,093 கோடி ரூபாயாக உயர்ந்து சந்தை முதலீட்டாளர்களை அசத்தியுள்ளது.
இந்நிலையில் திங்கட்கிழமை காலாண்டு முடிவுகளை வெளியிட்ட எச்டிஎப்சி நிறுவனம், தனது நிறுவன முதலீட்டாளர்களுக்கு இடைக்கால ஈவுத்தொகையுடன் சேர்த்து 14 ரூபாய் என்ற இறுதி ஈவுத்தொகையை அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்நிறுவனத்தின் கிளை நிறுவனங்களான எச்டிஎப்சி ஸ்டாண்டெட் லைப் இன்சூரன்ஸ், எச்டிஎப்சி ஏர்கோ ஜெனரல் இன்சூரன்ஸ் எனத் தனது 21 கிளை நிறுவனங்களின் ஒட்டுமொத்த லாபத்தைச் சேர்த்தால் நடப்பு நிதியாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த லாப அளவு 16 சதவீத உயர்வில் 10,190 கோடி ரூபாய் என்ற அளவை எட்டியுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் இந்நிறுவனத்தின் பங்குகள் 0.43 சதவீதம் உயர்ந்து 1,093.10 ரூபாய் என்ற அளவை எட்டியுள்ளது.