டெல்லி: மத்திய அரசு தங்க நகை கடைக்காரர்களின் மீது விதிக்கப்பட்ட 1 சதவீத கலால் வரி மற்றும் பான் கார்டு கட்டாயம் ஆகியவற்றுக்கு எதிராகத் தொடர் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏப்ரல் மாதத்தில் தங்க இறக்குமதி அளவு 67.33 சதவீதம் குறைந்துள்ளது.
தென் இந்தியாவில் நகை கடைக்காரர்களின் போராட்டம் மிகப்பெரிய அளவில் இல்லை என்றாலும், வட மாநிலங்களில் அதிலும் முக்கிய வர்த்தகப் பகுதியாகத் திகழும் மும்பை, குஜராத் போன்ற பகுதிகளில் போராட்டம் வலுத்தது.
இதனால் தங்கம் மீதான வர்த்தகம் அதிகளவில் பாதித்தது.
இதன் எதிரொலியாக இந்தியா சந்தையில் தங்கம் இறக்குமதி 67.33 சதவீதம் குறைந்து 19.6 டன்னாகக் குறைந்துள்ளது. கடந்த வருடம் இதே காலக்கட்டத்தில் இதன் அளவு 60 டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் அறிவிப்புகளை எதிர்த்து சுமார் 42 நாட்கள் நகை கடைக்காரர்கள் கடையடைப்புப் போராட்டத்தை நடத்தினர். 2015-16ஆம் ஆண்டில் மொத்த தங்க இறக்குமதியின் அளவு 750 டன்னாக இருக்கிறது. கடந்த நிதியாண்டில் இதன் அளவு 971 டன்னாக இருந்துள்ளது.