மும்பை: அமெரிக்கச் சந்தையின் ஏப்ரல் மாதத்திற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிக்கையை வெளியிடப்பட உள்ளது. இந்த அறிக்கை அமெரிக்கச் சந்தைக்குச் சாதகமாக இருந்தால் ஜூன் மாதம் நடக்க இருக்கும் வட்டி உயர்விற்கு ஆலோசனை கூட்டத்தில் பெடரல் வங்கி 0.25% சதவீத வட்டியை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தையில் காலை வர்த்தகம் துவக்கம் முதலே சரிவுடன் துவங்கியது. ஆனால் ஐரோப்பிய சந்தையின் துவக்கத்தில் சென்செக்ஸ் குறியீடு சிறப்பான வர்த்தகத்தைப் பெற்ற மிகப்பெரிய சரிவில் இருந்து தப்பியது.
வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 33.71 புள்ளிகள் சரிந்து 25,228.50 புள்ளிகளை எட்டியது.
அதேபோல் நிஃப்டி குறியீடு 2.05 புள்ளிகள் மட்டுமே சரிந்து 7,733.45 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
இன்றைய வர்த்தகத்தில் கெயில், பெல், ஏசியன் பெயின்ஸ், எஸ்பிஐ, டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி, பார்தி ஏர்டெல் போன்ற முக்கிய நிறுவனங்கள் மட்டுமே கணிசமான லாபத்தைச் சந்தித்தது.