மும்பை: 2015ஆம் நிதியாண்டின் கடைசிக் காலாண்டில் நாட்டின் முன்னணி நிறுவனங்களின் வர்த்தக முடிவுகள், சந்தை முதலீட்டாளர்களையும் பாதித்தாலும், பெரும்பாலான நிறுவனங்கள் சந்தையில் போராடிக் குறைந்த அளவிலான லாபத்தை எட்டியுள்ளது.
இதனால் 2016ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வலிமையான பாதையை அமைத்துள்ளது காலாண்டு முடிவுகள். இதன் எதிரொலியாக உள்நாட்டு சந்தை முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் அதிகளவில் முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர்.
அமெரிக்கப் பெடரல் வங்கி
வல்லரசு நாடான அமெரிக்காவில் ஏப்ரல் மாதத்தில் குறைந்த அளவிலான வேலைவாய்ப்புகள் மட்டும் உருவாக்கப்பட்டுள்ளதால், ஜூன் மாதத்தில் நடக்க இருக்கும் வட்டி உயர்வு கூட்டத்தில் பெடரல் வங்கி கண்டிப்பாக வட்டி உயர்வை அறிவிக்காது.
இதன் காரணமாக இன்று பங்குச்சந்தையில் அன்னிய முதலீட்டு அளவு அதிகரித்துக் காணப்பட்டது.
சர்வதேச சந்தைகள்
வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தில் சீன சந்தை 2.79 சதவீதம் சரிந்தாலும், இந்திய சந்தைக்குச் சாதகமாக ஜப்பான், ஹாங்காங், ஐரோப்பிய சந்தைகள் லாபத்தை அடைந்துள்ளது.
வங்கிப் பங்குகள்
மும்பை பங்குச்சந்தையில் அன்னிய முதலீட்டு அளவுகள் அதிகரித்துள்ளதால், வங்கிப் பங்குகளில் ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎப்சி ஆகியவை 2.50 சதவீதத்திற்கு அதிகமான உயர்வை அடைந்தது.
சென்செக்ஸ்
இன்றைய வர்த்தகத்தில் சர்வதேச சந்தை மற்றும் உள்நாட்டுச் சந்தையின் சாதகமான சூழ்நிலையால் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு யாரும் எதிர்பார்க்காத வகையில் 1.82 சதவீதம் அளவிலான உயர்வை எட்டியுள்ளது.
இன்றைய வர்த்தகம் துவக்கம் முதல் தொடர் உயர்வைச் சந்தித்த சென்செக்ஸ் வர்த்தக முடிவில் 460.36 புள்ளிகள் உயர்ந்து 25,688.86 புள்ளிகளை எட்டியது.
நிஃப்டி
காலை வர்த்தகம் துவங்கிய முதல் தொடர் உயர்வைக் கண்ட நிஃப்டி இன்று 132.60 புள்ளிகள் உயர்ந்து 7,866.05 புள்ளிகளை அடைந்தது.
நிறுவனங்களின் நிலை
திங்கட்கிழமை வர்த்தகத்தில் சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் சிப்லா, டாடா ஸ்டீல், ஹிந்தூஸ்தான் யூனிலீவர் மற்றும் டாக்டர் ரெட்டி ஆகிய நிறுவனங்கள் மட்டும் கணிசமான சரிவை சந்தித்தது.