மும்பை: சர்வதேச சந்தை முதலீட்டாளர்கள், கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தின் மீது முதலீட்டை அதிகரித்ததால் 3 வார உச்சத்திற்குச் சென்றது கச்சா எண்ணெய்யின் விலை. இதனால் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் ஆசிய சந்தை லாபகரமான வர்த்தகத்தைச் சந்தித்தது.
ஆசிய சந்தையின் தாக்கத்தின் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையில் இன்று காலை 100 புள்ளிகள் உயர்வுடன் துவங்கியது. செவ்வாய்க்கிழமை ஆசிய சந்தையை வலுப்பெற்ற நிலையில், இந்திய பங்குச்சந்தையில் அதிகளவிலான முதலீடு எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் அமெரிக்கப் பெடரல் வங்கியின் வட்டி உயர்த்த முடியாத நிலை ஆகியவை சர்வதேச முதலீட்டாளர்களை அதிகளவில் தங்கம் மற்றும் எண்ணெய்யில் முதலீடு செய்யத் தூண்டியது.
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 120.38 புள்ளிகள் உயர்ந்து 25,773.61 புள்ளிகளை அடைந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடு 30 புள்ளிகள் உயர்ந்து 7,890.75 புள்ளிகளை எட்டி செவ்வாய்க்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.