டெல்லி: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, லாபத்தில் 66 சதவீத சரிவை சந்தித்துப் பங்குச்சந்தை முதலீட்டாளர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
2016ஆம் ஆண்டின் 4வது காலாண்டு முடிவுகளை இன்று வெளியிட்டுள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, மார்ச் மாத முடிந்த காலாண்டில் வெறும் 1,263.81 கோடி ரூபாய் மட்டுமே நிகர லாபமாகக் கொண்டு 66 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.
மொத்த லாபம்
2016ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் மாத காலகட்டத்தில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் மொத்த லாபமாக 1,263.81 கோடி ரூபாய் பெற்றுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் இவ்வங்கி 3,742.02 கோடி ரூபாய் லாபமாகப் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
வருமானம்
இந்நிலையில், மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் எஸ்பிஐ வங்கியின் மொத்த வருமானம் 53,526.97 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டில் இதன் அளவு 48.646.61 கோடி ரூபாயாக இருந்தது.
வராக் கடன்
இதே காலக்கட்டத்தில் எஸ்பிஐ வங்கியின் வராக்கடன் அளவு 2.5 மடங்கு அதிகரித்து 12,139.17 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதுவே இவ்வங்கியின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக உருவெடுத்துள்ளது.
பங்குச்சந்தை
இந்நிலையில் மும்பை பங்குச்சந்தையில் எஸ்பிஐ வங்கியின் பங்குகள் சரிவைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதலீட்டாளர்கள் இவ்வங்கியின் மீது அதிகளவிலான நம்பிக்கையை வைத்து 1.09 சதவீத உயர்வடைந்தது 189.00 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.