மும்பை: செவ்வாய்க்கிழமை நடந்த ரிசர்வ் வங்கியின் இருமாத நாணயக் கொள்கையின் மறுஆய்வுக் கூட்டத்தில், ரகுராம் ராஜன் வணிக வங்கிளுக்கு அளிக்கப்படும் கடனுக்கான வட்டி விகிதத்தை, பணவீக்கம் மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வுகளைக் கருத்தில் கொண்டு எவ்விதமான மாற்றமில்லாமல் ரெப்போ விகித்தை 6.50 சதவீதமாக அறிவித்தார்.
இதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தையில் வங்கி பங்குகள் மீது இன்று அதிகளவிலான அன்னிய முதலீடு செய்யப்பட்டது.
மேலும் உள்நாட்டுச் சந்தையிலும் கணிசமான வர்த்தகமும், முதலீடும் செய்யப்பட்டதால் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று 27,000 புள்ளிகளைத் தாண்டியது.
நிதியமைச்சகம் ரெப்போ விகிதத்தைக் குறைக்க வலியுறுத்தினாலும், ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்க மறுத்தது. இதனால் இன்று வங்கித்துறை பங்குகள் மீது அதிகளவிலான முதலீடு குவிந்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 232.22 புள்ளிகள் உயர்ந்து 27,009.67 புள்ளிகளை எட்டியது. அதேபோல் நிஃப்டி குறியீடு 65.40 புள்ளிகள் உயர்ந்து 8,266.45 புள்ளிகளை அடைந்து செவ்வாய்க்கிழமை வர்த்தகம் முடிந்தது.
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் எஸ்பிஐ 5.40 சதவீதமும், ஐசிஐசிஐ வங்கி 4.31 சதவீதம் வரையிலும் உயர்ந்து மும்பை பங்குச்சந்தையை 27,000 புள்ளிகளை எட்ட வழிவகுத்தது.