மும்பை: ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான வாக்கெடுப்பு வருகிற ஜூன் 23ஆம் தேதி நடைபெற உள்ளது.
உலகப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய சக்தியாக இருக்கும் ஐரோப்பிய சந்தையில் இருந்து சக்தி வாய்ந்த பொருளாதார நாடான பிரிட்டன் வெளியேறுவதால் சர்வதேச பொருளாதாரச் சந்தையே கவலையில் மூழ்கியுள்ளது.
இதன் தாக்கம் திங்கட்கிழமை வர்த்தகத்தில் அதிகளவில் காணப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் கணிசமாகக் குறைந்து காணப்பட்டது. ஆயினும் இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தது.
இதனுடன் அமெரிக்கப் பெடர்ல் வங்கியின் நாணய கொள்கை கூட்டமும் இன்று துவங்கியுள்ளது. இக்கூட்டத்தில் வட்டி உயர்விற்கான ஆலோசனை நடைபெறும். சந்தைக் கணிப்புகளின் படி நாளை வெளிவர உள்ள நாணய கொள்கை முடிவுகளில் வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் இருக்காது எனத் தெரிகிறது.
இதன் காரணமாக ஐரோப்பிய சந்தை தாக்கத்தை அமெரிக்கச் சந்தை காத்துள்ளது.
செவ்வாய்க்கிழமை மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 150 புள்ளிகள் வரை சரிந்தாலும் வர்த்தக முடிவில் நிலையான வர்த்தகத்தை அடைந்தது. இதன் காரணமாகச் சென்செக்ஸ் குறியீடு வெறும் 1.06 புள்ளிகள் சரிந்து 26,395.71 புள்ளிகளை அடைந்தது.
அதேபோல் நிஃப்டி குறியீடு 1.75 புள்ளிகள் சரிந்து 8,108.85 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.