மும்பை: இந்திய பங்குச்சந்தையை அதிகளவில் பாதிக்கும் அமெரிக்கப் பெடரல் வங்கி மற்றும் ஜப்பான் மத்திய வங்கிகளின் நாணய கொள்கையின் வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் அறிவிக்காதது இந்திய சந்தைக்கும் மிகவும் சாதகமான சூழ்நிலையை உருவாகியுள்ளது.
இதேவேளையில் ஐரோப்பிய யூனியனில் இருந்து மிகப்பெரிய பொருளாதார நாடான பிரிட்டன், வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் தென்படுவதால் சர்வதேச பொருளாதாரச் சந்தைக்கு இது மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குகிறது.
இதன் காரணமாகவே இன்று மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 300 புள்ளிகள் வரையிலான சரிவை சந்தித்தது.
வியாழக்கிழமை வர்த்தகத்தில் துவக்கம் முதலே சரிவை சந்தித்த சென்செக்ஸ் குறியீடு, மதியம் 12 மணியளவில் சுமார் 300 புள்ளிகள் வரை சரிவை சந்தித்தது. இதன் பின் வர்த்தகம் முடியும் தருவாயில் சந்தையில் வர்த்தகம் கணிசமாக அதிகரித்தால் வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 200.88 புள்ளிகள் சரிந்து 26,525.46 புள்ளிகளை அடைந்தது.
அதேபோல் நிஃப்டி குறியீடு 65.85 புள்ளிகள் சரிந்து 8,140.75 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவிற்கு வந்தது.