மும்பை: இந்திய சந்தையில் நிலவும் சாதகமான வாய்ப்புகளுடன் அமெரிக்கப் பெடரல் வங்கியின் வட்டி உயர்வு குறித்த முடிவுகள் இந்திய சந்தைக்குப் புதிய முதலீட்டுக்கான வாய்ப்புகளை அதிகளவில் உருவாக்கியுள்ளது.
இதனுடன் இந்தியாவில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்கான பல புதிய அனுமதிகளை மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. இதற்கிடையில் ஆசிய சந்தையும் இன்று லாபமான வர்த்தகத்தைப் பெற்றுள்ளது.
இதனால், கடந்த வாரம் பல ஏற்ற இறக்கங்களுடன் இந்திய வர்த்தகச் சந்தை இன்று 500 புள்ளிகள் வரை உயர்ந்து சென்செக்ஸ் குறியீடு 28,000 புள்ளிகளைத் தாண்டியுள்ளது.
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் சுமார் 500 புள்ளிகள் வரை உயர்ந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 440.35 புள்ளிகள் வரை உயர்ந்து 28,343.01 புள்ளிகளை அடைந்தது.
அதேபோல் நிஃப்டி குறியீடு 136.90 புள்ளிகள் உயர்ந்து 8,744.35 புள்ளிகளை அடைந்து செவ்வாய்க்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.