அமெரிக்காவில் வேலைவாய்ப்பு உருவாக்குதல் எண்ணிக்கை அதிகளவில் குறைந்துள்ளதால் அடுத்த வரும் அமெரிக்கப் பெடரல் வங்கியின் நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி உயர்வுக்கான வாய்ப்புகள் அதிகளவில் குறைந்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் மிகப்பெரிய வர்த்தகச் சரிவு ஏற்பட்டுள்ளது.
இத்தகையைச் சூழ்நிலையில் அன்னிய முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டை இந்திய சந்தை பக்கம் திருப்பி அதிகளவிலான லாபத்தை எதிர்நோக்கி முதலீடு செய்தனர்.
இதன் எதிரொலியாக 3 நாள் சந்தை விடுமுறைக்குப் பின் துவங்கிய மும்பை பங்குச்சந்தை இன்று அதீத முதலீட்டுடன் 250 புள்ளிகள் உயர்வுடன் துவங்கியது. சர்வதேச சந்தையின் மோசமான சூழ்நிலையில் வலுவடைந்த இந்திய சந்தை செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் தொடர் உயர்வைச் சந்தித்தது.
இன்றைய வர்த்தகச் சந்தை முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 445.91 புள்ளிகள் உயர்வில் 28,978.02 புள்ளிகளை எட்டியது.
சென்செக்ஸ் குறியீட்டை போல் தொடர் உயர்வில் இருந்த நிஃப்டி இன்று ஒரு வருட உச்சத்தை எட்டியுள்ளது. செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் நிஃப்டி குறியீடு 133 புள்ளிகள் உயர்ந்து 8,943 புள்ளிகளை அடைந்து சந்தை முடிவடைந்தது.