இந்திய - பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதற்றமான நிலையைக் கட்டுக்குள் கொண்டு வர, இரு நாடுகளும், ராணுவத்தினரும் ஒப்புக்கொண்டுள்ள நிலையில் சர்வதேச சந்தையில் இந்திய சந்தை மீது இருந்த பாதிப்புகள் இன்று குறைந்து சென்செக்ஸ் குறியீடு சுமார் 390 புள்ளிகள் வரை உயர்ந்தது.
இருநாடுகளின் எல்லையில் அமைதி நிலவ இந்திய மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் பாதுகாப்புத் துறை உறுதி செய்துள்ளதை அடுத்து மும்பை பங்குச்சந்தையை விட்டு வெளியேறிய அன்னிய முதலீட்டாளர்கள் இன்று அதிகளவில் முதலீடு செய்து சந்தை உயர்விற்கு முக்கியக் காரணமாக விளங்கினர்.
அதுமட்டும் அல்லாமல் ஆட்டோமொபைல் சந்தையில் கணிப்புகளைத் தாண்டிய விற்பனை அளவுகளை எட்டியது, இதனால் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டிற்கும் அனைத்து வாகன தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகளும் உயர்வுடன் காணப்பட்டது.
அனைத்திற்கும் மேலாக நாளை நடப்பெற உள்ள புதிய ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் தலைமையிலான இருமாத நாணய கொள்கை மறுஆய்வு கூட்டத்தில் வணிக வங்கிகளுக்கு அளிக்கப்படும் வட்டி விகிதத்தின் அளவு குறைந்தபட்சம் 0.25 சதவீதமாவது குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் எதிரொலியாகவே இந்திய சந்தையில் முதலீட்டு அளவு இன்று அதிகரித்துக் காணப்படுகிறது.
ராகுராம் ராஜன் கவர்னர் பதவியில் வெளியேறி நடக்கும் முதல் இருமாத நாணய கொள்கை மறுஆய்வு கூட்டம் இது என்பதால், மத்திய அரசுக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் சாதகமாக இக்கூட்டத்தின் முடிவுகள் இருக்கும் எனத் தெரிகிறது. ராஜன் எப்போதும் பணவீக்கத்தைக் குறைக்கும் நோக்கத்தைக் கொண்டு இருப்பவர், பணவீக்கும் குறைந்தாலே நாட்டில் பொருளாதார வளர்ச்சி தானாக உயரும் என்பது அவர் கருத்து.
பணவீக்கும் குறைவதால் நுகர்வோர் சந்தையில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடையும்.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 377.33 புள்ளிகள் அதாவது வெள்ளிக்கிழமை வர்த்தக நிலையை விடவும் 1.35 சதவீதம் உயர்ந்து 28,243.29 புள்ளிகள் வரை உயர்ந்து, 28,000 புள்ளிகள் என்ற வலிமையான வட்டத்திற்குள் சென்செக்ஸ் நுழைந்தது.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் இன்று நிலையான வர்த்தக உயர்வுடன் 126.95 புள்ளிகள் உயர்ந்து 8,738.10 புள்ளிகளை எட்டியுள்ளது.