மும்பை: செவ்வாய்க்கிழமைவ வர்த்தகம் உயர்வுடன் முடிந்த நிலையில் புதன்கிழமை வர்த்தகம் 800 புள்ளிகள் சரிவுடன் துவங்கியுள்ளது.
இந்திய பங்குச்சந்தை மட்டும் அல்லாமல் சீனா, ஜப்பான், ஹாங்காங் போன்ற முக்கியமான சந்தைகளும் அதிகளவிலான வர்த்தக சரிவை இன்று சந்தித்துள்ளது. ஆனால் இந்திய சந்தை சரிவிற்கும் பிற நாட்டு சந்தை சரிவிற்கும் காரணம் வேறு.
பிரதமர் மோடி
மத்திய அரசு 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என அறிவித்துள்ள நிலையில் வர்த்தகச் சந்தையும் முதலீட்டுச் சந்தையும் ஆடிப்போய் உள்ளது. 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளைப் பயன்பாட்டில் இருந்து நீக்குவதன் மூலம் இந்தியாவில் ஒழிந்திருக்கும் கருப்புப் பணம் அனைத்தும் தற்போது கணக்கில் வந்து சேரும்.
கருப்பு பணம்
மோடியின் இந்த அறிவிப்பால் இந்தியாவில் அதிகளவில் மறைத்து வைக்கப்பட்டு இருக்கும் கருப்புப் பணம் தற்போது சந்தைக்கு வரும் என்பது நிச்சயம். இந்தச் செயல் மக்களுக்கு அதிகளவிலான பாதிப்புகளை அளித்தாலும், நாட்டின் பொருளாதாரத்திற்கும், வளர்ச்சிக்கும் இது மிகப்பெரிய காரணமாக இருக்கும்.
இதன் எதிரொலியாகப் பங்குச்சந்தையில் இன்று துவக்கம் முதலே அதிரடியான சரிவை அடைந்தது.
அமெரிக்க தேர்தல்
இதனுடன் அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்கெடுப்பு நடத்து வரும் நிலையில் டொனால்டு டிரம்ப் 216 இடத்திலும், ஹிலாரி கிளின்டன் 197 இடத்திலும் முன்னிலையில் உள்ளனர். இதன் மூலம் டிரம்ப் வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பாதிப்பும் பங்குச்சந்தையில் அதிகளவிலான தெரிகிறது.
800 புள்ளிகள் சரிவு
இன்றைய வர்த்தகத்தில் துவக்கத்திலேயே மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 800 புள்ளிகள் அளவிலான சரிவில் துவங்கியது. இதனால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
10.00 மணி அளவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 684.52 புள்ளிகள் சரிவில் 26,906.62 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
நிஃப்டி குறியீடு எப்போதும் பார்த்திராத வகையில் 225.40 புள்ளிகள் குறைந்து 8,318.15 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.