மும்பை: மத்திய அரசின் 500 மற்றும் 1000 ரூபாய் புழக்கத்திற்குத் தடை அறிவித்த நாள் முதல் மக்கள் வங்கிகளில் தினந்தோறும் தங்களிடம் இருக்கும் ரூபாய் நோட்டுகளை டெப்பாசிட் செய்து வருகின்றனர். இதன் காரணமாக வங்கிகளிடம் பணப் புழக்கத்திற்கு அதிகளவிலான தொகை உள்ளது.
இதனால் இனி வங்கிகள் டெப்பாசிட் பெற அதிக வட்டி அளிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்து தளர்ந்துள்ளது. இதன் காரணமாக நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி டெப்பாசிட்-கான வட்டி விகிதத்தைக் குறைத்த நிலையில் தற்போது ஐசிஐசிஐ, எச்டிஎப்சி போன்ற முன்னணி வங்கிகளும் குறைந்துள்ளது.
0.25சதவீதம் வரை குறைப்பு
வங்கிகளில் தற்போது தேவைக்கு அதிகமாகப் பணப்புழக்கம் இருப்பதால் நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளான ஐசிஐசிஐ, எச்டிஎப்சி வங்கிகள் வங்கி வைப்பு நிதிக்கான வட்டியை 0.25 சதவீதம் வரை குறைத்துள்ளது.
அடுத்தச் சில நாட்களில் கடனுக்கான வட்டி விகிதமும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐசிஐசிஐ வங்கி
புதன்கிழமை முதல் ஐசிஐசிஐ வங்கியின் 390 நாட்கள் முதல் 2 வருடம் வரையிலான வைப்பு நிதியின் வட்டி விகித்தை 0.15 சதவீதம் வரை குறைத்துள்ளது. இதனால் 7.25 சதவீதமாக இருந்த வட்டி வருமானம் 7.10 சதவீதமாகக் குறைய உள்ளது.
எச்டிஎப்சி வங்கி
இந்திய சந்தையிலும் சரி பன்னாட்டு சந்தைகளிலும் சரி, ஐசிஐசிஐ வங்கிக்கு அனைத்து விதத்திலும் கடுமையாகப் போட்டி அளிக்கும் எச்டிஎப்சி வங்கியின் வைப்பு நிதியின் வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்துள்ளது.
இந்தப் புதிய வட்டி விகிதம் வியாழக்கிழமை முதல் அமலாக்கப்பட உள்ளது.
இதன் மூலம் 1 வருட வைப்பு நிதிக்கு 7 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் தற்போது 6.75 சதவீதமாகக் குறைய உள்ளது.
எஸ்பிஐ
பாரத ஸடேட் வங்கி புதன்கிழமை தங்களது வைப்பு நிதிக்கான வட்டியை 0.15 சதவீதம் குறைக்க உள்ளதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
ஆக்சிஸ் வங்கி
மேலும் ஆக்சிஸ் வங்கிக் கடனுக்கான வட்டி விகிதத்தை 0.15-0.20 சதவீதம் வரை குறைந்துள்ளது.
வைப்புத் தொகை
பிரதமர் மோடியின் அறிவிப்புக்குப் பின்னான 7 நாட்களில் எஸ்பிஐ வங்கி 1,14,139 கோடி ரூபாய் தொகையை வைப்பாகப் பெற்றுள்ளது.