புதன்கிழமை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அவர்கள் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது வரும் ஏப்ரல் முதல் ஜிஎஸ்டி அமல் படுத்த முடியாத காரணத்தால் அதற்கு நிகராகச் சேவை வரியை 15 சதவீதத்தில் இருந்து 16 முதல் 18 சதவீதம் வரை உயர்த்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகின்றது.
இப்படிச் சேவை வரி உயர்த்தப்பட்டால் போன் பில், விமான டிக்கெட், ஹோட்டல் உணவு கட்டணங்கள் போன்றவை விலை உயர வாய்ப்புள்ளது.
ஜூலை முதல் ஜிஎஸ்டி
கலால் வரி, சேவை வரி மற்றும் மதிப்பு கூட்டு வரி போன்ற மத்திய, மாநில வரி விதிப்புகள் அனைத்தையும் இணைத்து ஜிஎஸ்டி வரியாக ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கின்றது. ஜிஎஸ்டி அமலுக்கு வரும் போது 5, 12, 18 மற்றும் 28 சதவீதமாக வரிகள் விதிக்கப்படும் என்று வல்லுநர்கள் கூறிவருகின்றனர்.
இரண்டு விதமான சேவை வரி
சென்ற ஆண்டுப் பட்ஜெட்டின் போது 14.5 சதவீதமாக இருந்த சேவை வரியை 0.5 சதவீதம் உயர்த்தி 15 சதவீதமாக அருண் ஜெட்லி உயர்த்தினார். மேலும் சிலர் இப்போது சேவை வரி உயர்த்தப்படும் போது 12 மற்றும் 18 சதவீதம் என்று இரண்டு விதமாகச் சேவை வரி வசூலிக்கப்படும். மேலும் ஏப்ரல் மற்றும் ஜூன் மாதத்தில் அதிகபட்சமாக வரி வசூலிக்கும் போது அரசுக்கு மேலும் வருவாய் கிடைக்கும்.
ஜிஎஸ்டி
ஜிஎஸ்டிக்கு நிகரான சேவை வரியை இப்போது உயர்த்திவிட்டால் பின்னர் ஒரு நாடு ஒரே வரி என்று அமலுக்கு வரும் போது மக்களுக்குப் பெரிதாக விலை உயர்வு ஏற்பட்டதாகத் தெரியாது.
சேவை வரி
வரவிருக்கும் பட்ஜெட்டில் சேவை வரியை அருண் ஜேட்லி உயர்த்தினால் அது மூன்றாவது முறையாக உயர்த்துவது ஆகும். 2015 ஆம் ஆண்டு 12.36 சதவீதமாக இருந்த சேவை வரியை 14 சதவீதமாக உயர்த்தினர். பின்பு அதில் தூய்மை இந்தியா திட்டத்திற்காக 0.5 சதவீதமும், கிரிஷ் கல்யான் செஸ் வரியாக 0.5 சதவீதமும் உயர்த்தி 15 சதவீதமாகச் சேவை வரி செலுத்தப்பட்டு வருகின்றது.