வெளிநாட்டில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்தில் 16,200 கோடி ரூபாய் வருமான வரித் துறையினரால் கண்டறியப்பட்டுள்ளதாகப் பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை அருண் ஜெட்லி தகவல் தெரிவித்தார்.
முறையான விசாரணையின் விளைவாக எச்எஸ்பிசி வங்கி கணக்கு மூலமாக இரண்டு ஆண்டுகளில் 8,200 கோடி ரூபாய் வரை கணக்கில் காண்பிக்காத பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
துப்பறியும் பத்திரிகையாளர்கள் சர்வதேச கூட்டமைப்பு
மேலும் 8,000 கோடி ரூபாய் வரை கணக்கில் காண்பிக்கப்படாமல் இந்தியர்கள் வெளிநாட்டு வங்கி கணக்கில் பதுக்கிவைத்துள்ளதாகவும், அவர்களுடைய பெயர் மற்றும் விவரங்கள் துப்பறியும் பத்திரிகையாளர்கள் சர்வதேச கூட்டமைப்பு (ICIJ) அளித்த அறிக்கையில் இருந்து கண்டறியப்பட்டுள்ளதாகவும் மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் அளிக்கும் போது அருண் ஜெட்லி கூறினார்.
எவ்வளவு கருப்புப் பணம்
வெளிநாட்டில் இந்தியர்கள் எவ்வளவு கருப்புப் பணம் வைத்துள்ளார்கள் என்ற தகவல் ஏதும் இல்லை, ஆனால் அரசு வெளிநாட்டில் உள்ள இந்தியர்களின் கருப்புப் பணத்தை வெளிக்கொண்டு வருவதற்கான பணிகளில் முழுவீச்சாகச் செயல்பட்டு வருகின்றது என்றும் தெரிவித்தார்.
கருப்புப் பண சட்டம்
கருப்புப் பணத்தின் சட்டத்தின் கீழ் கணக்கில் காண்பிக்கப்படாத வெளிநாட்டு வருமானம் மற்றுச் சொத்துக்கள் விவரங்களைக் குறிப்பாகத் திறம்பட ஆராய்ந்து வருவதாகவும் நிதி அமைச்சர் கூறினார்.
கருப்புப் பணத்தை வைத்துள்ளவர்களுக்குக் கருப்பு பணத்தின் சட்டத்தின் கீழ் கடுமையான அபராதம் மற்றும் வழக்குகள் பதிவு செய்ய விதிகள் உள்ளன என்றும் அருண் ஜேட்லி கூறினார்.
பணம் மோசடி தடுப்புச் சட்டம் 2002
மேலும் கருப்புப் பணச் சட்டத்தின் கீழ் முதல் முறையாகக் கணக்கில் காண்பிக்கப்படாத வருமானம் மற்றும் சொத்துக்கள் பணம் மோசடி தடுப்புச் சட்டம் 2002-இன் கீழ் திட்டமிடப்பட்ட குற்றமாகக் கருதப்படும் என்பதையும் தெரிவித்தார். அதுமட்டும் இல்லாமல் கருப்புப் பணம் எதிராக அரசு எடுத்துள்ள நடவடிக்கை அனைத்தையும் பட்டியலிட்டு விளக்கம் அளித்தார் அருண் ஜெட்லி.