‘மகப்பேறு உதவி மசோதா’ பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக இயற்றப்பட்டது.. நன்மைகள் என்னென்ன..?
வேலை செய்யும் பெண்களுக்கான மகப்பேறு நன்மை மசோதா 2016 இன்று பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக இயற்றப்பட்டு முதல் இரண்டு குழந்தைகளுக்கு 12 வாரங்களாக இருந்த விடுமுறை காலம் 26 வாரங்களாக உயர்த்தப்பட்டது.
இந்த மசோதா ஏற்கனவே மாநிலங்களவையில் குளிர் காலக் கூட்டத்தின் போது விவாதிக்கப்பட்டு வெற்றிகரமாக இயற்றப்பட்டு இருந்தது. இதையடுத்து இப்போது நாடாளுமன்றத்திலும் வெற்றிகரமாக இயற்றப்பட்டு அமலுக்கு வருகின்றது.
இந்த மசோதா வெற்றிகரமாக இயற்றப்பட்டதால் மகப்பேறு உதவிச் சட்டம், 1961-ல் பின் வரும் திருத்தங்களை எல்லாம் நடைமுறைக்கு வர இருக்கின்றன.
மகப்பேறு விடுப்பு
வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான விடுமுறை காலத்தை முதல் இரண்டு குழந்தைக்கு மட்டும் 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக உயர்த்தப்படுகின்றது.
இரண்டு குழந்தைகளுக்கும் அதிகம் என்றால்
இதுவே இரண்டு குழந்தைகளுக்கும் அதிகமாக உள்ளவர்களுக்கு 12 வாரங்கள் மட்டும் விடுமுறை அளிக்கப்படும்.
குழந்தை தத்தெடுப்பவர்களுக்கு விடுமுறை நாட்கள்
மூன்று மாதங்களுக்குக் குறைவான காலத்தில் பிறந்த குழந்தையைத் தத்தெடுக்க விரும்புபவர்களுக்கு 12 வாரங்கள் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும். மேலும் குழந்தை தத்து எடுக்கும் போது வளர்ப்புத் தாய் மற்றும் குழந்தை பெற்றெடுக்கும் தாய் என இருவருக்கும் இந்த விடுமுறை பொருந்தும்.
சிறார் பராமரிப்பு வசதி
50 ஊழியர்களுக்கு அதிகமாக இருக்கும் ஒவ்வொரு நிறுவனத்திலும் சிறார் பராமரிப்பு வசதி ஏற்படுத்தப்படும். குழந்தையை அங்குச் சென்று பார்த்துக்கொள்ள அலுவலகங்களில் பணி நேரங்களில் நான்கு முறை அனுமதிகள் வழங்கப்படும்.
வீட்டில் இருந்தே வேலை செய்யும் வசதி
ஊழியர்களால் வீட்டில் இருந்தபடியே பணிபுரிய முடியும் என்றால் அதற்கான அனுமதியும் வழங்கப்படும்.
நிறுவனங்கள்
அனைத்து நிறுவனங்களிலும் பெண்களுக்குப் பணியில் சேறும் போதே இதற்கான சலுகைகள் பற்றி விளக்க வேண்டும்.
மேனகா காந்தி
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி லட்சக் கணக்கான பெண்களின் நலன் கருதி சட்டமாகக் கொண்டு வர உதவிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் ஸ்ரீ பாந்துரூ தத்தாத்ரேயாவிற்கு நன்றி தெரிவித்தார்.
மேலும் தனது வாழ்த்துச் செய்தியில் குழந்தைகள் பெற்றுக்கொள்ள விரும்பும் வேலை பார்க்கும் அனைத்துப் பெண்களுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டிற்கு எப்போது தனது பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் துணையாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
மசோதா உருவானதற்கான காரணம்
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு தொழிலாளர் துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்ததன் பேரில் வேலை பார்க்கும் பெண்கள் 6 மாதம் வரை குழந்தைகளுக்குத் தாய்ப் பால் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததன் பெயரில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்கள் இதை ஏற்குமா?
மகப்பேறு உதவி மசோதாவில் 26 வாரங்கள் விடுமுறை வழங்குவதால் தனியார் நிறுவனங்கள் 6 மாதங்கள் விடுமுறை அளிக்கும் நிலைக்குத் தள்ளப்படுவதால் இதை எப்படி ஏற்கும் மற்றும் சிறார் பராமரிப்பு வசதிகளை ஏற்படுத்தி தருமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications