மும்பை: அதிகளவிலான அன்னிய முதலீடு, நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பாஜகவின் அதிரடியான வெற்றிகள், மக்களுக்கும் வர்த்தகச் சந்தைக்கும் மோடி மீதான நம்பிக்கையைப் பல மடங்கு உயர்த்தியுள்ளது.
இதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தை இன்று வர்த்தகத்தைத் துவங்கிய சில நிமிடங்களில் 600 புள்ளிகள் அதாவது ஓரே நாளில் 2 சதவீதம் என்ற வரலாறு காணாத உயர்வை அடைந்துள்ளது.
ஆசிய சந்தையில் அதிர்வுகள்
சனிக்கிழமை 5 மாநில தேர்தலின் முடிவுகள் வெளியான நிலையில் மோடியின் வெற்றி இந்திய சந்தையில் மட்டும் அல்லாமல் சர்வதேச சந்தையிலும் மிகப்பெரிய அளவிலான அதிர்வுகள் ஏற்படுத்தியது. குறிப்பாகச் சிங்கப்பூர், ஆசிய சந்தையில் இதுகுறித்த அதிர்வுகளை அதிகளவில் பார்க்க முடிந்தது.
312 சீட்டுகளில் வெற்றி
உத்தரபிரதேச மாநில தேர்தலில் பிரதமர் மோடியின் பாரத ஜனதா கட்சி எதிர்பார்ப்புகளையும் தாண்டி 403 சீட்டுகளில் 312 சீட்டுகளில் வெற்றி கனியை பறித்துள்ளது. இதன் மூலம் மோடி பார்வையிலான இந்திய பொருளாதாரத்தின் மறுசீரமைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது.
ரூபாய் மதிப்பு
பிரதமர் மோடியின் வெற்றியின் காரணமாகத் திங்கட்கிழமை வர்த்தகத் துவக்கத்தில் ஹோலி பண்டிகைக்காக மும்பை பங்குச்சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் நாணய சந்தை முழுமையாகச் செயல்படும் நிலையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது.
பங்குச்சந்தை
சென்செக்ஸ் குறியீடு இன்று வர்த்தகத் துவக்கத்தில் 29,437 புள்ளிகள் என்ற மிகப்பெரிய அளவிலான வரலாறு காணாத உயர்வுடன் துவங்கியுள்ளது. நிஃப்டி குறியீடு இன்று 9,092 புள்ளிகளில் வர்த்தகத்தைத் துவங்கி அதிரடிகளைக் கிளப்பி வருகிறது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
மதியம் 1 மணியளவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 468.69 புள்ளிகள் உயர்ந்து 29,414.92 புள்ளிகளை அடைந்துள்ளது. அதேபோல் நிஃப்டி குறியீடு 142.40 புள்ளிகள் உயர்ந்து 9,076.95 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.
அன்னிய முதலீடு
உலகச் சந்தையில் நிலவும் மந்தமான வர்த்தகச் சூழ்நிலையின் காரணமாக இந்திய சந்தையில் நடைபெறும் தேர்தல் மற்றும் அதன் மூலம் ஏற்படும் மாற்றங்களில் அதிகளவிலான லாபக்தை சம்பாதிக்க மார்ச் மாதத்தின் முதல் 10 நாட்களில் சுமார் 10000 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை அன்னிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர்.
10 நாளில் ரூ.10,000 கோடி..
மார்ச் மாத்தில் 1-10 தேதிகளுக்குள் அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் 9,628 கோடி ரூபாய், கடன் சந்தையில் 660 கோடி ரூபாய் அளவில் மொத்தம் 10,288 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.
இது அமெரிக்க டாலர் மதிப்பில் 1.54 பில்லியன் டாலர்.
முக்கியமான தேர்தல்
பணமதிப்பிழப்பு, வங்கி கட்டணங்கள் எனப் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளுக்குப் பின் மத்தியில் ஆளும் கட்சி தேர்தலை எதிர்கொள்வதால் இந்தத் தேர்தல் முக்கியமாகப் பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டும் அல்லாமல் அன்னிய முதலீட்டுக்கான தளர்வு, ஜிஎஸ்டி அமலாக்கம் ஆகியவை அடுத்து மோடி தலைமையிலான அரசு செயல்படுத்த உள்ள திட்டங்கள்.
அடுத்தப் பிரதமர்
இந்தியா முழுவதும் மக்களின் மனநிலை இதேப்போன்று இருந்தால், அடுத்தப் பிரதமராகவும் மோடி இருப்பார் என்பது எவ்விதமான சந்தேகமில்லை. இது நடந்து முடிந்த 5 மாநில தேர்தலை வைத்து மட்டுமே வெளியிடப்பட்ட கணிப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தையின் போக்கு...
இதன் மூலம் அடுத்தச் சில வாரங்களுக்கு இந்திய சந்தையில் அதிகளவிலான அன்னிய முதலீடு செய்யப்படுவது மட்டும் அல்லாமல், பங்குச்சந்தை வர்த்தகம் மிகப்பெரிய அளவிலா வளர்ச்சிகளை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.